சோழ அரசராக விஜயாலய சோழன் பதவி ஏற்றபோது பல்லவர்களின் தலைமையின் கீழ் உறையூரைத் தலைநகராகக் கொண்ட சிறு பகுதியை மட்டுமே சோழர்கள் ஆட்சி செய்து வந்தனர். ஆனால் அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்குள்ளாகவே சோழர்களின் பலம் பல மடங்கு பெருகிற்று. இந்நிலைக்கு மிக முக்கியமான காரணமாயிருந்தவன் ஒப்பற்ற வீரனும், இராஜதந்திரியுமான முதலாம் ஆதித்ய சோழன்.
ஆதித்ய சோழன் மறைவுக்குப் பிறகு அவரின் மகனான முதலாம் பராந்தக சோழன் சோழ மன்னராகப் பதவி ஏற்றார்.
முதலாம் பராந்தக சோழன் மன்னராகப் பதவி ஏற்ற உடனேயே சோழப் பேரரசை வெற்றி பெற எண்ணி இராஷ்டிரகூட மன்னன் இரண்டாம் கிருஷ்ணன், தன் பேரன் கன்னர தேவன் தலைமையில் சோழ நாட்டின் மேது படை எடுத்தார். ஆனால் அந்த போரில் முதலாம் பராந்தக சோழன் வெற்றிபெற்றார் . அதுமுதல் முதலாம் பராந்தக சோழன் தன் ஆட்சிக்காலம் முழுவதும் செய்த போர்களில் வெற்றி மேல் வெற்றி பெற்றார்
முதலாம் பராந்தக சோழன் ஆட்சிக்கு வந்தபொழுது, சோழநாடு வடக்கில் மைசூர் பீடபூமி நீங்கலாக, தெற்கே காவிரி வரையிலான பகுதியும், மேற்குத் கடற்கரையோரமாக ஒரு பகுதியும், சென்னை, காளத்தி வரையிலும் பரவியிருந்தது.
ஆட்சிக்கு வந்த சிறிது காலத்திலேயே பாண்டிய நாட்டின் மீது முதலாம் பராந்தக சோழன் படையெடுத்தார். களப்பிரரை முறியடித்து கிபி 575 இல் ஏற்படுத்தப்பட்ட பாண்டிய அரசு இவர் காலத்தில் கிபி 915 இல் முறியடிக்கப்பட்டது . அந்த சமயத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட பாண்டிய மன்னன் மூன்றாம் இராஜசிம்மன். பல ஆண்டுகள் நடை பெற்ற இந்தப் போரில் இலங்கை மன்னன் ஐந்தாம் காசியப்பன் பாண்டிய மன்னனுக்கு ஆதரவாகப் போரிட்டான். ஆயினும் போரின் முடிவில் முதலாம் பராந்தக சோழன் பாண்டியர்களை முறியடித்து மதுரையை வெற்றி கொண்டார்.
போரில் தோற்ற பாண்டிய மன்னன் மூன்றாம் இராஜசிம்மன் இலங்கைக்கு தப்பி ஓடினான். பாண்டிய அரசை கைப்பற்றியதை த் தொடர்து தன் தந்தை ஆதித்ய சோழன் கட்டாது விட்டப் பல கோயில்களை முதலாம் பராந்தக சோழன் கட்டினான். ஆட்சிக்கு வந்த மூன்றாம் ஆண்டிலேயே “மதுரை கொண்ட” என்ற விருதை அவன் பெற்றான். இவன் பாணர்களை வெற்றி கொண்டதுடன் கங்க மன்னன் ஹுஸ்தி மல்லனைத் தன் அதிகாரத்திற்கு உட்படுத்தினான. கங்க மன்னர்கள் சோழரது அதிகாரத்திற்கு உட்பட்ட நண்பராகவும், சேரமன்னன் நெருங்கிய நண்பனாகவும் கருதப்பட்டனர்.
இலங்கையின் வரலாற்றுப் பதிவான மகாவம்சம் கூறும் குறிப்புகளிலிருந்து (மஹாவம்சா சி.வி. பாகம், 52, பக். 70) சோழப் பாண்டியப் போரின் மூன்று கட்டங்களைப்பற்றி அறியலாம். முதல் கட்டத்தில் முதலாம் பராந்தக சோழனிடம் பாண்டிய மன்னன் தோல்வியுற்றான். இரண்டாம் கட்டத்தில் பாண்டிய மன்னன், ஈழ மன்னனது உதவியைக் கோரிப் பெற்று, சோழப்படையைத் தாக்கினான். பாண்டிய ஈழத்துப்படைகள் சோழப்படையிடம் தோற்றுப் பின்வாங்கின. ஈழப்படைத்தலைவன் சோழரை வெல்ல மீண்டும் முயன்றது மூன்றாம் கட்டமாகும். பாண்டியருக்கான போர்களில் சேர மன்னன், கீழப்பழுவூர்த் தலைவர்களான பழுவேட்டரையர் ஆகியோரைத்தவிர, கொடும்பாளூரைச் சேர்ந்த வேளிர் தலைவரும் முதலாம் பராந்தக சோழனுக்காக உதவி செய்தனர்.
கொடும்பாளூர் வம்சத்தைச் சேர்ந்த தென்னவன் இளங்கோவேள் என்பவரின் குடும்பத்தை சேர்ந்த பூதி ஆதிக்க பிடாரி என்ற பெண்ணை பராந்தகனின் மகன்களில் ஒருவனான அரிகுலகேசரி திருமணம் செய்தான்.
போரில் தோற்று ஓடிய பாண்டி மன்னன் மூன்றாம் இராஜசிம்மன், பாண்டிய மன்னனின் மணி முடியையும், மற்ற சின்னங்களையும் சிங்கள மன்னனிடம் ஒப்படைத்தான். சிங்கள மன்னன் நான்காம் உதயன் ஆட்சிக் காலத்தில் இவற்றைத் திரும்பிப் பெறமுயன்ற பராந்தக சோழன் போரில் வெற்றி பெற்றாலும் பாண்டிய மன்னனின் மணி முடியை பெரும் முயற்சில் தோல்வியை தழுவினான். மறக்கப்படாமலிருந்த இவனது குறிக்கோள் பல ஆண்டுகளுக்கு பிறகு, இவனது வழித்தோன்றலான முதலாம் இராஜேந்திரனால் நிறைவேற்றப்பட்டது
முதலாம் பராந்தக சோழன் 48 ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்பதை அவனது 48-ம் ஆண்டின் கல்வெட்டுகளிலிருந்து நாம் அறியலாம். முதலாம் ஆதித்ய சோழனின் வெற்றிகளை தொடர்ந்து நிறைவேற்றும் வகையில் பாண்டியர்களின் சுதந்திரத்தைப் பறித்து, சோழ நாட்டைத் தெற்கே கன்னியாகுமரிவரை பரவச்செய்தான். எஞ்சியிருந்த பல்லவர்களின் அதிகாரம் முற்றிலும் மறைந்தது, முதலாம் பராந்தக சோழனின் நாடு, வடக்கே நெல்லூர் வரை பரவியது.
இந்திய வரலாற்றில் முதன் முதலில் நிர்வாக சபை உறுப்பினரைத் தேர்ந்து எடுக்கப் பயன்பட்ட தேர்தல் முறையான குடவோலை முறையை செயல்படுத்தியவர் முதலாம் பராந்தக சோழனே ஆவார்
கி.பி. 940ல் முதல் பராந்தக சோழனின் நம்பிக்கையுடைய நண்பனும் அவன் ஆட்சிக்குட்பட்டவனுமான கங்கமன்னன் இரண்டாம் பிருதிவிபதி மரணம் அடைந்தான். இதுவே கங்க நாட்டிலிருந்து, பராந்தக சோழனுக்கு ஏற்பட்ட தொல்லைகளின் தொடக்கமாக அமைந்தது. இரண்டாம் பிரதிவீபதி தன் வாழ்நாளின் இறுதியில், ஒரே மகன் விக்கியண்ணனை இழந்திருந்தான். இரண்டாம் பிரிதிவீபதியின் தாயாதியான இரண்டாம் பூதுகன் என்பவன் கங்க நாட்டின் தனிப்பெரும் தலைவனாக விளங்கினான். சோழர்களின் வலிமையைக்கண்டு அஞ்சி, முதலாம் பராந்தக சோழன் ஆட்சி முடிவதற்கு முன், வட மேற்கிலிருந்து மிகுந்த படைபலத்துடன் மூன்றாம் கிருஷ்ணன் சோழ நாட்டின் மீது படையெடுத்தான். அதன் விளைவாக நடைபெற்ற போரில் பராந்தகனின் மூத்த மகனான இராஜாதித்தன் உயிரிழன்தான். இதற்குப்பின் முதலாம் பராந்தக சோழனும் வெகுகாலம் உயிர் வாழவில்லை. முதலாம் பராந்தக சோழன் இறந்தது முதல் பின்னர் தொடர்ந்த முப்பது ஆண்டுகள் வரையில் சோழ நாடு பெரும் இருளில் ஆழந்திருந்தது.
Comments