பல்லவர்கள் தமிழ்நாட்டை மூவேந்தர்கள் அல்லாது ஆண்ட மற்றும் ஒரு புகழ்பெற்ற அரச பரம்பரையினர். பல்லவர்கள் கி.பி. 300ம் ஆண்டு முதல் கி.பி. 897ம் ஆண்டு வரையில் தமிழ்நாட்டையும், ஆந்திரா, கர்நாடகா மற்றும் இலங்கையையும் ஆட்சி புரிந்துள்ளனர். பல்லவ அரச பரம்பரையில் வந்த மன்னர்கள் சற்றேறக்குறைய 600 ஆண்டுகள் ஆட்சி புரிந்துள்ளனர். பல்லவ மன்னர்கள் ஆண்ட பகுதி தொண்டை மண்டலம் அல்லது தொண்டை நாடு என்று அழைக்கப்படுகிறது.
பல்லவர்களின் தோற்றம்
பல்லவர்கள் பற்றி பல்வேறு கருத்துகள் உள்ளன. இவர்கள் வடஇந்தியர்கள் என்றும் இவர்கள் இலங்கையை அடுத்த மணிபல்லவத் தீவிலிருந்து வந்தவர்கள் என்றும் தொண்டை மண்டலத்துப் பழங்குடிகள் என்றும் பஹலவர்கள் எனும் பாரசீக மரபினர் என்றும் கருத்துகள் சரித்திர ஆராய்ச்சியாளர்கள் இடையில் நிலவுகின்றன. பொதுவில் தென்னிந்தியர் என்று நம்பப்படும் பல்லவ மன்னர்கள் சாதவாகனப் பேரரசில் குறுநில மன்னர்களாகவும் ஆட்சியாளர்களாகவும் செயல்பட்டு வந்தார்கள்.
சாதவாகனப் பேரரசு வலுக்குன்றிய காலத்தில் பல்லவ மன்னர்கள் போதிய படை வலிமை திரட்டிக் கொண்டு கிருஷ்ணா ஆற்றிற்குத் தெற்குப்பகுதியை ஆளத் தொடங்கினர். தொடர்ந்து தொண்டை நாட்டையும், களப்பிரர்களையும், சிற்றரசர்களாக இருந்த சோழர்களையும் வென்று புதுக்கோட்டை வரை சென்று தமிழகத்தின் வட பகுதியை ஆளத் தொடங்கினர். பல்லவ மன்னர்கள் பல்லவ சாம்ராஜ்ஜியத்தை காஞ்சிபுரத்தைத் தலை நகரமாகக் கொண்டு ஆண்டனர்.
சிற்பக்கலை
பல்லவ மன்னர்கள் சிற்பக்கலைக்கு மிகவும் முக்கியத்துவம் தந்துள்ளனர். குடவரை கோயில்கள் அமைப்பதிலும் கற்றளி கோயில்கள் கட்டுவதுலும் பல்லவர்கள் முன்னோடிகளாகத் திகழ்ந்தனர். இவர்கள் ஆட்சிக்காலத்தில் உலகப் புகழ்பெற்ற பல கோயில்கள் கட்டப்பட்டன. முக்கியமாக மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்கள் மற்றும் காஞ்சிபுரத்தில் அமைத்துள்ள கைலாசநாதர் கோயிலும் இரண்டாம் நரசிம்ம பல்லவனால் கட்டப்பட்டது ஆகும்.
முற்காலப் பல்லவர்கள்
பப்பதேவன்
சிவகந்தவர்மன்
விசய கந்தவர்மன்
புத்தவர்மன்
இடைக்காலப் பல்லவர்கள்
முதலாம் விட்ணுகோபன்
முதலாம் குமாரவிட்ணு
முதலாம் கந்தவர்மன்
வீரவர்மன்
இரண்டாம் கந்தவர்மன்
முதலாம் சிம்மவர்மன்
இரண்டாம் விட்ணுகோபன்
இரண்டாம் குமாரவிட்ணு
மூன்றாம் கந்தவர்மன்
இரண்டாம் சிம்மவர்மன்
புத்தவர்மன்
முதலாம் நந்திவர்மன்
மூன்றாம் விட்ணுகோபன்
மூன்றாம் குமாரவிட்ணு
மூன்றாம் சிம்மவர்மன்
பிற்காலப் பல்லவர்கள்
சிம்மவிஷ்ணு
முதலாம் மகேந்திரவர்மன்
முதலாம் நரசிம்மவர்மன் (மாமல்லன்)
இரண்டாம் மகேந்திரவர்மன்
பரமேஸ்வரவர்மன்
இரண்டாம் நரசிம்மவர்மன் (ராஜசிம்மன்)
இரண்டாம் பரமேஸ்வரவர்மன்
இரண்டாம் நந்திவர்மன் (பல்லவமல்லன்)
தந்திவர்மன்
மூன்றாம் நந்திவர்மன்
நிருபதுங்கவர்மன் (தென் பகுதி)
கம்பவர்மன் (வட பகுதி)
அபராஜிதவர்மன்