சாளுக்கியப் பேரரசை ஆண்ட மன்னர்களுள் இரண்டாம் புலிகேசி மிகவும் புகழ்பெற்ற மன்னனாவான். இரண்டாம் புலிகேசி கி.பி. 610ம் ஆண்டு முதல் கி.பி.642ம் ஆண்டு வரையில் சாளுக்கிய பேரரசின் மன்னனாக ஆட்சிபுரிந்தான். இரண்டாம் புலிகேசியின் ஆட்சி காலத்தில் சாளுக்கியப் தக்காணத்தின் பெரும் பகுதியை உள்ளடக்கியதாக விளங்கியது.
இரண்டாம் புலிகேசி இயற்பெயர் எறெயா (இறையா). முடி சூட்டிக்கொண்டபோது புலிகேசி என்னும் பெயர் பெற்றான். இவர் சாளுக்கிய மன்னன் முதலாம் கீர்த்திவர்மனின் மகன் ஆவான்.
சாளுக்கிய மன்னன் முதலாம் கீர்த்திவர்மன் இறந்தபோது இவனின் மகன் இரண்டாம் புலிகேசி சிறுவனாக இருந்த காரணத்தால் முதலாம் கீர்த்திவர்மனின் தம்பி மங்களேசன் பகர ஆளுனராக சாளுக்கிய நாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றான்.
மங்களேசனும் ஒரு திறமையான மன்னனாக விளங்கினான். மங்களேசன் ஆட்சி காலத்திலும் சாளுக்கியபி பேரரசின் எல்லைகள் விரிவடைந்தன. சுந்தரவர்மன் என்பவன் மங்களேசனின் மகன் ஆவான். தன் மகன் சுந்தரவர்மனை சாளுக்கியப் பேரரசின் மன்னனாக்க வேண்டும் என்ற விருப்பத்தினால் தொடர்ந்து மங்களேசன் சாளுக்கிய மன்னனாக ஆட்சிப்பொறுப்பில் நீடித்தான்.
முதலாம் கீர்த்திவர்மனின் மகன் இரண்டாம் புலிகேசிக்கு சாளுக்கிய நாட்டை ஆட்சி செலுத்துவதற்குரிய வயது வந்த போதும், மங்களேசன் இரண்டாம் புலிகேசியிடம் ஆட்சியை ஒப்படைக்காமல் தாமதப்படுத்தி வந்தான்.
இரண்டாம் புலிகேசி சாளுக்கியத் தலைநகர் வாதபியை விட்டுச் சென்று வானவப் (கோலார்) பகுதியில் மறைந்திருந்து கொண்டு படையைத் திரட்டினான். தற்போது இந்தப் பகுதி கோலார் என்று அழைக்கப்படுகிறது.
வேட்டவடக்கூர் கல்வெட்டு கூறும் தகவலின் படி இளப்பட்டு சிம்பிகை என்னும் இடத்தில் இடம்பெற்ற போரில் மங்களேசன் தோல்வியடைந்து கொல்லப்பட்டான். இரண்டாம் புலிகேசி சாளுக்கியப் பேரரசின் மன்னனாகப் படவியேற்றான்.
இரண்டாம் புலிகேசி பல போர்களில் வெற்றிவாகை சூடினான். வானவாசி கடம்பர்கள், தலைக்காடு கங்கர்கள், கொங்கண் மண்டலத்தை ஆண்ட மயிலர்கள் ஆகியோரை போரில் இரண்டாம் புலிகேசி வெற்றி கொண்டான்.
இரண்டாம் புலிகேசி புரிந்த போர்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது ஹர்ஷவர்தனரை போரில் தோற்கடித்து ஆகும். பேரரசர் ஹர்ஷவர்தனர் என்பவர் வட இந்தியாவை 40 வருடங்கள் வரை ஆண்ட ஒரு இந்தியப் பேரரசர் ஆவார். இரண்டாம் புலிகேசி ஹர்ஷவர்தனரை போரில் தோற்கடித்ததன் வாயிலாக ஹர்ஷவர்தனரின் ராஜ்ஜிய எல்லை விரிவாக்கத்தை நர்மதை நதிக்கு அப்பால் தடுத்து நிறுத்தினார்.
இரண்டாம் புலிகேசியின் கி.பி. 634-635 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஆய்ஹோளே (அய்யாபாளைய) கல்வெட்டு இவன் வேங்கி நாட்டை வென்று, பின்பு பல்லவ நாட்டைத் தாக்கியதாகக் கூறப்பட்டுள்ளது.
கி.பி. 630ம் ஆண்டு சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி பல்லவ சாம்ராஜ்யத்தின் மீது போர் தொடுத்தான். முதலாம் மகேந்திரவர்ம பல்லவனின் ஆட்சிக்காலத்தில் காஞ்சியின் மீது இந்தப் படையெடுப்பு நடைபெற்றது. இரண்டாம் புலிகேசியால் பல்லவர்கள் தலைநகர் காஞ்சி முற்றுகையிடப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏற்பட்டப் போரில் பல்லவர்படை தோற்கடிக்கப்பட்டது. இப்போரில் மகேந்திரவர்ம பல்லவன் இறந்தான்.
இதற்கு பழி வாங்கும் பொருட்டு மகேந்திரவர்ம பல்லவனின் மகன் நரசிம்மவர்ம பல்லவன் கி.பி.642ம் ஆண்டு சாளுக்கியத் தலைநகர் வாதாபியின் மீது படையெடுத்துச் சென்றான். இப்படையில் ஒரு லட்சம் காலாட்படை வீரர்களும், ஐம்பதாயிரம் குதிரை வீரர்களும், பன்னிரெண்டாயிரம் யானைகளும் இருந்ததாக கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் கூறப்படுகின்றன. நரசிம்மவர்ம பல்லவன் இம்மாபெரும் படையெடுப்பை நடத்தி வாதாபி நகரை எரித்து பல்லவ குலத்திற்கு ஏற்பட்ட அவமானத்தைப் போக்கினான் என்பதை நம் கல்வெட்டுகள் வாயிலாக அறியமுடிகிறது. இந்த வெற்றிக்குப் பிறகு நரசிம்மவர்ம பல்லவன் வாதாபி கொண்டான் என்ற பெயரால் அழைக்கப்பட்டான். இந்தப்போரில் இரண்டாம் புலிகேசி கொல்லப்பட்டான்.
Comments