திருத்தணி முருகன் கோயில் திருவள்ளூர் மாவட்டத்தின் திருத்தணி மலையில் அமைந்துள்ளது. ஆண்டின் 365 நாட்களையும் குறிக்கும்படியாக 365 படிகளைக் கொண்டது இந்த மலைக்கோயில். இக்கோயில் அறுபடை வீடுகளில் ஒன்று. திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலமிது. முத்துச்சாமி தீட்சதராலும் பாடப்பட்ட தலம். இக்கோயிலை தணிகை முருகன் கோயில் என்றும் அழைப்பர். சங்க காலப் புலவரான நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படையில் இக்கோயில் குறித்த குறிப்புகள் காணப்படுகிறது. இக்கோயில் விஜயநகர மன்னர்களாலும், உள்ளூர் நிலக்கிழார்களாலும் பேணப்பட்டு வந்தது

திருத்தணிகையின் பெருமை
புராண முக்கியத்துவம்
தமிழ் கடவுள் முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக முருகப் பெருமானின் கிரீடத்தில் ஜொலிக்கும் வைரக்கல்லாக இத்திருத்தலம் பிரகசமாக உள்ளது. முருகக் கடவுளின் பெயர் தணிகாச்சலம் எனவும் கூறப்படுகிறது. முருகப் பெருமான் தேவர்களின் துயரம் நீங்கும் பொருட்டு சூரபத்மனுடன் செய்த பெரும் போரும் வள்ளியம்மையை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாக நிகழ்த்திய சிறுகோபமும் தணிந்து அமர்ந்த தலம் ஆதலின் இதற்குத் தணிகை எனப் பெயரமைந்தது. தேவர்களின் அச்சம் தணிந்த இடம், முனிவர்களின் காம வெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம், அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை ஆகியவற்றைத் தணிக்கும் இடமாதலாலும் இதற்குத் தணிகை என் பெயரமைந்தது.
முருகப் பெருமான் தன் கிரியா சக்தியாகிய தெய்வானையைத் திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்து கொண்டாற்போல் திருத்தணிகையில் தன் இச்சா சக்தியாக வள்ளியம்மையைத் திருமணம் செய்து கொண்டு மகிழ்ந்து இனிது வீற்றிருந்தருள்கிறார். மேலும், இக்கடவுளை ஐந்து குறிப்பிட்ட தினங்களில் தொடர்ந்து வழிபடும் பக்தர்கள் கடவுளின் ஆசியை பெற்றும் அவரது வாழ்கையில் அரிய பேறுகளை பெற்றவர்கள் ஆகிறார்கள்.
திரேதா யுகத்தில் ராவணனை போரில் வென்று அதனால் ஏற்பட்ட பாவத்திற்கு பரிகார பூஜைகள் செய்ய ராமேஸ்வரம் சென்று திரும்பும் வழியில், சிவபெருமான் கேட்டுக் கொண்டதற்கிணங்க, திருத்தணிகையில் முருகப் பெருமானை வழிபட்டு மனச் சாந்தி பெற்றதாக புராணங்கள் கூறுகின்றது. துவாபர யுகத்தில் அர்ஜுனன் தென் பகுதிக்கான தீர்த்த யாத்திரை செல்லும் வழியில் இந்திருக்கோயில் சுவாமியை தரிசித்து ஆசி பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.
திருத்தணிகையில் முருகனை வழிபட்டு தாரகாசூரனால் கவரப்பட்ட தமது சக்கரம் மற்றும் சங்கு முதலியவற்றைத் திருமால் மீண்டும் பெற்றார். அவர் உண்டாக்கிய விஷ்ணு தீர்த்தம், மலையின்மேல் கோயிலுக்கு மேற்கே உள்ளது.
திருத்தணிகையில் பிரம்மதேவர் முருகப் பெருமானைப் பூஜித்துப் படைப்புத் தொழில் செய்யும் ஆற்றலை திரும்பப் பெற்றார். மேலும், சூரபத்மனால் கவரப்பட்ட தமது செல்வங்களையும் முருகன் அருளால் திரும்பப்பெற்றார். கலைமகளும் இந்தலத்தில் முருகனைப் பூஜித்தாள். கிழக்கே மலையடிவாரத்திலிருந்து மலைமேல் ஏறிச் செல்லும் வழியில், பாதித் தொலைவில் மலைபடிகளை அடுத்த வடபக்கத்தில் பிரம்மதேவர் உண்டாக்கிய பிரம்ம தீர்த்தம் இருக்கிறது. இது பிரம்மசுனை என அழைக்கப்படுகிறது. இதன் தென்கரையில் பிரம்மேசுவரர் கோயில் அமைந்துள்ளது.
சூரபத்மனால் தேவலோகத்திலிருந்து கவர்ந்து கொண்டு செல்லப்பெற்ற, சங்கநிதி, பதுமநிதி, காமதேனு, சிந்தாமணி, கற்பகதரு முதலிய செல்வங்களை மீண்டும் பெறுவதற்காக இந்திரன் முருகனை இங்கு பூஜித்தான். திருத்தணிகை மலைக்குத் தென்புறத்தில் உள்ள ஒரு சுனையில், நீலோற்பல மலர்க்கொடியை நட்டு வளர்த்து அதன் பூக்களைக் கொண்டு காலை, மாலை, நண்பகல் என்று மூன்று வேளைகளிலும் இந்திரன் முருகனை பூஜித்தான். அதுபோல் அவன் ஸ்தாபித்து, வணங்கி அருள் பெற்ற விநாயகருக்குச் செங்கழுநீர் விநாயகர் என்று பெயர். அவனால் உண்டாக்கப் பெற்ற நீலோற்பல மலர்ச்சுனை இந்திர நீலச்சுனை என்னும் பெயர் பெற்ற தீர்த்தமாக மலைக்கோயிலின் தெற்கு வாயிலுக்கு நேராக இருக்கின்றது. இது கல்கார தீர்த்தம் என்வும் அழைக்கப்படுகின்றது. இத்தீர்த்தகத்தின் நீர்தான் சுவாமியின் திருமுழுக்கிற்கும், திருமடைப்பள்ளிக்கும் மற்றும் பூஜை செய்வதற்கும் தனிச்சிறப்பாகப் பயன் படுத்தப்படுகிறது. அதனால் இத்தீர்த்தத்தைத் தொலைவிலிருந்து தொழுதல் வேண்டுமேயன்றி வேறு எவ்வகையிலும் நாம் பயன்படுத்துதல் ஆகாது.
பதி, பசு, பாசம் என்னும் இறை, உயிர், தளை ஆகிய முப்பொருள் இயல்புகளைக் கூறும் சைவ சித்தாந்த் நுட்பங்களை இங்கு முருகனை வழிபட்டுத் திருநந்தித் தேவர் அறிவுறுத்தப் பெற்றார். அவன் பொருட்டு முருகப் பெருமான் வரவழைத்த “சிவதத்துவ அமிர்தம்” என்னும் நதியே இப்பொழுது நந்தியாறு என் அழைக்கப்படுகிறது.முருகனின் அருளைப் பெற நந்தி தேவர் யாகம் புரிந்த குகை நந்தி குகை என அழைக்கப்படுகிறது.
தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்த போது மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்னும் நாகத்தினை நாணாகவும் கொண்டு கடைந்தனர். அங்ஙனம் கடைந்த போது வாசுகி நாகத்தின் உடலில் பல வடுக்களும், புண்களும், தழும்புகளும் ஏற்பட்டு பெரிதும் துயர் விளைவித்தன. ஒரு சுனையில் நாள்தோரும் முறையாக நீராடி முருகனை வழிபட்டு, வாசுகி நாகம் அத்துயரங்களினின்று நீங்கி உய்த்தது. ஆதிசேச தீர்த்தம் விஷ்ணு தீர்த்ததிற்க்கு மேற்கே மலைப் பாதைக்குத் தென்புறம் இருக்கிறது.இங்கு முருகனை வழிபட்டு, அகத்திய முனிவர் முத்தமிழ்ப் புலமையும், சிவஞானத் தெளிவும் பெற்றார். அவர் உண்டாக்கிய அகத்திய தீர்த்தம் ஆதிசேச தீர்த்தத்திற்குத் தென் கிழக்கில் உள்ளது.
இலக்கிய முக்கியத்துவம்
சற்றேற்குறைய அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சிறந்த தவயோகியாகிய அருணகிரிநாதர் இத்திருத்தலத்தின் பெருமையை திருப்புகழ் எனும் நூலின் மூலம் பாடல்கள் அமைத்து பாராட்டியுள்ளார். இவர் தமது பாடல்களில் தணிகை மலையை கைலாய மலைக்கு ஒப்பிட்டும் புகழ்ந்துள்ளார். 150 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சிறந்த தவயோகியும் சித்தருமான இராமலிங்க வள்ளலார் சுவாமிகள், அருட்பிரகாச வள்ளலார் என அழைக்கப்பட்டவர். தமது திருவருட்பா நூலில் திருகோயிலின் முருகப் பெருமானைப் பற்றிப் பாடியிருப்பதும் திருத்தணிகை முருகனின் அருங்காட்சியினை சென்னையிலுள்ள தமது இல்லத்தில் கண்ணாடியில் கண்டு தரிசித்து அருள் பெற்றதையும் உணர முடிகிறது. மேலும், மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் தணிகை மலையில் தமக்கு சங்கீத ஞானம் வேண்டி முருகனை பூஜித்த போது முருகப் பெருமான் அவர் நாவில் அட்சர ஆசி அருளி அவருக்கு பாடும் திறனை வழங்கினார். அன்னாரும், முதல் பாட்டாக ”ஒம் குரு குஹாய நம” என்று முதல் அடி எடுத்து பாடலைத் தொடுத்தார். இவ்வாறு பல அதிசயங்கள் தணிகை மலையில் பற்பல அருளாலர்களுக்கு முருகப் பெருமானால் அருளப்பட்டுள்ளதால் மிகவும் தொன்மை வாய்ந்ததாகவும், பெருமை வாய்ந்ததாகவும் திருத்தணி தலம் விளங்குகிறது.
திருத்தனியின் சிறப்புகள்
சரவணப் பொய்கை
முருகப் பெருமான் சரவணப் பொய்கை தீர்த்தத்தில் கார்த்திகை பெண்களுக்கு குழந்தையாக அவதரித்த திருக்குளம். திருத்தணிகை சரவணப் பொய்கை தீர்த்தத்தில் நீராடுவோர் தங்களது உடல் உபாதைகள், பாவங்கள் கலையப்ப்டுவதக ஐதீகம். சரவணப் பொய்கையில் நீராடிய பின்பே படிக்கட்டுகள் வழியாக மலைக்கோயிலை சென்றடைகின்றனர். ஆடிக்கிருத்திகை திருவிழாவின் போது மலைக்கோயிலில் உற்சவர் அலங்காரத்துடன் பவனி வந்து தெப்பக் குளத்தில் தெப்பத்தில் சுற்றி வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.
சப்தரிஷி தீர்த்தம்
சப்தரிஷிகள் என்று கூறப்படும் வசிஷ்டர் முதலான ஏழு முனிவர்கள் இங்கு முருகனைப் பூஜித்தனர். அவர்கள் பூஜித்த இடம் மலையின் தென்புறத்திசையில் உள்ளது. அவர்கள் அமைத்த ஏழு சுனைகளும் மற்றும் கன்னியர் கோயிலும் இங்கு உள்ளன. இந்த இடம் இப்போது ஏழு சுனை கன்னியர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. அடர்ந்த சோலைகளால் சூழப்பெற்ற பசுமைத்தன்மையும் நிறைந்த, வெயில் நுழையாமல் அமைதி மிகுந்த இடமாகத் திகழ்கின்ற இந்த இடம், தவத்திற்கும் தியானத்திற்கும் ஏற்ற இடமாக விளங்குகின்றது. திருத்தணி நகரின் வெளிப்புறத்தின் நந்தியாற்றங்கறையில் பழமை வாய்ந்த விஜயராகவ சுவாமி, ஆறுமுக சுவாமி மற்றும் வீரட்டீஸ்வரர் திருக்கோயில்கள் அமைந்துள்ளன. இவை ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. பழய காலம் தொட்டு நீண்ட வருடங்களாக ஆறுமுக சுவாமி கோயிலில் அமைந்துள்ள மூலவரின் பாதத்தில், மார்பில், சிரசில் தொடர்ந்து மூன்று நாட்கள் சூரிய ஒளி விழுந்து காணப்படுவது பக்தி பரவசமூட்டும் நிகழ்ச்சியாகும்.
தல சிறப்பு
வருடத்தின் நாட்களைக் குறிக்கும்விதமாக 365 படிகளுடன் அமைந்த கோயில் இது 1 லட்சம் ருத்தராட்சங்களால் ஆன ருத்ராட்ச மண்டபம் இங்கு உற்சவர் சன்னதியாக உள்ளது. முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் 5வது வீடு. அமர்ந்த நிலையில் அருணகிரியார் திருச்செந்தூரில் சூரனை வதம் செய்து விட்டு வந்து அமர்ந்து கோபம் தணிந்த தலம். அசுரனோடு மோதியதன் காரணமாக இத்தலத்து மூலவரின் நெஞ்சில் பள்ளம் (துவாரம்) இன்னமும் இருக்கிறதாம். சுவாமி சாந்த சொரூபம். தெய்வேந்திரன் யானையை(ஐராவதம்) தெய்வானைக்கு கல்யாணப் பரிசாக தந்த தலம். இங்கு மூலஸ்தானத்துக்கு முன்பாக மயிலுக்கு பதிலாக யானை உள்ளது.
முருகன் வலக்கையில் சக்தி ஹஸ்தம் எனப்படும் வஜ்ரவேலுடன் (இடிபோன்ற ஓசையெழுப்பும் சூலம் போன்ற கருவி) இடக்கையை தொடையில் வைத்து ஞானசக்திதரராக காட்சி தருகிறார். இவரிடம் மற்ற கோயில்களில் காணப்படும் வேல் கிடையாது. முருகன், கோபம் தணிந்து காட்சி தரும் தலமென்பதால் இங்கு சூரசம்ஹாரம் கிடையாது. முருகன் இங்கு யானை வாகனத்துடன் காட்சி தருகிறார். அதிலும் இத்தலத்தில் உள்ள யானை வாகனம், சன்னதியின் வெளியே பார்த்தபடி இருப்பது விசேஷமான தரிசனம்.
முருகனை வழிபட்ட இந்திரனால் உருவாக்கப்பட்ட கல்ஹார தீர்த்தம் மலையில் இருக்கிறது. வள்ளி மலையிலிருந்து வள்ளியை சிறையெடுத்து வந்து திருமணம் செய்து கொண்ட தலம். 365 படிக்கட்டுகள் கொண்ட மலை மீது அமைந்துள்ள அழகிய முருக தலம். எத்தலத்திலும் காணமுடியாத வழக்கமாக இத்தலத்து ஆபத்சகாய விநாயகரை கடைசியாகத்தான் வணங்குதல் வேண்டுமாம். இத்தலத்தில் வேறெங்கும் காணமுடியாத விஷ்ணு துர்க்கை ஆலயம் உள்ளது. மிகவும் பழமையான முருகன் திருத்தலம் இது. இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் ஆறு தளங்களைக் கொண்டது. இத்தலத்திற்கு குன்றுதோறாடல் என்ற சிறப்பு பெயரும் உண்டு.
வேல் இல்லாத வேலவன்
முருகன் வலக்கையில் சக்தி ஹஸ்தம் எனப்படும் வஜ்ரவேலுடன் (இடிபோன்ற ஓசையெழுப்பும் சூலம் போன்ற கருவி) இடக்கையை தொடையில் வைத்து ஞானசக்திதரராக காட்சி தருகிறார். இவரிடம் மற்ற கோயில்களில் காணப்படும் வேல் கிடையாது. அலங்காரத்தின்போது மட்டுமே தனியே வேல், சேவல் கொடி வைக்கின்றனர். வள்ளி, தெய்வானை இருவருக்கும் தனித்தனி சன்னதி உள்ளது. முருகனுக்குரிய “குமார தந்திர” முறைப்படி இங்கு பூஜை நடக்கிறது. மூலஸ்தானத்தில் முருகனுக்கு பின்புறம் வள்ளி, தெய்வானை இருவரும் இருக்கின்றனர். இவர்களுக்கு தனிச்சன்னதிகளும் இருக்கிறது.
சூரசம்ஹாரம்
முருகப்பெருமான் திருச்செந்தூரில், அசுரர்களுடன் போரிட்டு வென்றதன் அடிப்படையில் முருகத்தலங்களில், கந்தசஷ்டியின்போது சூரசம்ஹாரம் விமரிசையாக நடத்தப்படும். ஆனால் முருகன், கோபம் தணிந்து காட்சி தரும் தலமென்பதால் இங்கு சூரசம்ஹாரம் கிடையாது. அன்று முருகனைக் குளிர்விக்க புஷ்பாஞ்சலி செய்யப்படுகிறது. தற்போது, ஆயிரம் கிலோ பூக்களை இதற்காகப் பயன்படுத்துகிறார்கள்.
வாசலைப் பார்க்கும் யானை
முருகன் இங்கு யானை வாகனத்துடன் காட்சி தருகிறார். அதிலும் இத்தலத்தில் உள்ள யானை வாகனம், சன்னதியின் வெளியே பார்த்தபடி இருப்பது விசேஷமான தரிசனம். இதற்கு காரணம் உண்டு. இந்திரன், தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்து தந்தபோது, ஐராவதத்தை (தேவலோகத்து வெள்ளை யானை) சீதனமாக கொடுத்தார். இதனால், தேவலோகத்தின் ஐஸ்வர்யம் குறைந்தது. ஆகவே, ஐராவதத்தின் பார்வையை தேவலோகம் நோக்கி திருப்ப அனுமதிக்கும்படி முருகனிடம் வேண்டினார். முருகனும் சம்மதித்தார். எனவே ஐராவதம், தேவலோகத்து திசையான கிழக்கு நோக்கி இருக்கிறது.
கர்ண பரம்பரை கதை ஒன்றும் உண்டு. முருகன், வள்ளியை மணக்கச் சென்றபோது விநாயகராகிய யானையைக் கண்டு பயந்து ஓடினாள். தன்னைக்கண்டு மீண்டும் வள்ளி பயந்து விடக்கூடாது என்பதற்காக யானை வடிவில் விநாயகரே வெளியே பார்த்திருப்பதாக சொல்கிறார்கள்.
கஜவள்ளி
திருமாலின் மகள்களான அமுதவல்லி, சுந்தரவல்லி இருவரும் முருகனை மணக்க வேண்டி தவமிருந்தனர். இவர்களில் அமுதவல்லி, தெய்வானை என்ற பெயரில் இந்திரனிடமும், சுந்தரவல்லி வள்ளியாக நம்பிராஜனிடமும் வளர்ந்து முருகனை மணந்தனர். சகோதரிகளான இவ்விருவரும் வேறில்லை என்பதன் அடிப்படையில் இங்கு வள்ளியும் தெய்வானையும் அம்சத்துடன் ஒரே அம்பிகையாக கஜவள்ளி என்னும் பெயரில் அருள்கிறாள். இவள் வலது கையில் வள்ளிக்குரிய தாமரையும், இடக்கையில் தெய்வானைக்கு உரிய நீலோத்பவ மலரும் வைத்திருக்கிறாள். தங்கத்தேர் புறப்பாடு இல்லாத வெள்ளிக்கிழமைகளில், இவள் கிளி வாகனத்தில் எழுந்தருளுகிறாள்.
நோய் தீர்க்கும் சந்தனம்
திருத்தணியில் முருகனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சாதாரண சந்தனம் சாத்துவதில்லை. முருகனுக்கு இந்திரனே காணிக்கையாகக் கொடுத்ததாகச் சொல்லப்படும் சந்தனக்கல்லில், அரைக்கப்படும் சந்தனம் மட்டுமே சாத்தப்படுகிறது. இந்த சந்தனத்தை பக்தர்கள் நெற்றியில் இட்டுக்கொள்ளாமல், நீரில் கரைத்து குடித்து விடுகிறார்கள். இதனால் பல நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை. விழாக்காலங்களில் மட்டுமே இந்த சந்தன பிரசாதம் கிடைக்கும்.
ஆடி கிருத்திகை விசேஷம்
முருகப்பெருமானை இந்திரன், ஆடி கிருத்திகையன்று பூஜை செய்து வழிபட்டதாக ஐதீகம். எனவே, இத்தலத்தில் இவ்விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மூன்று நாட்கள் நடக்கும் இவ்விழாவின்போது சுவாமி, அடிவாரத்திலுள்ள சரவணப்பொய்கைக்கு எழுந்தருளுகிறார். இந்திரன் கல்ஹார புஷ்பம் என்னும் மலரை முருகனுக்குச் சூட்டி வழிபட்ட தலமென்பதால், இங்கு அதிகளவில் மலர்க்காவடி செலுத்துகின்றனர். மலர்க்காவடி வாடகைக்கு கிடைக்கிறது.
வெந்நீர் அபிஷேகம்
மூலஸ்தானத்திற்கு பின்புறமுள்ள சுவரில் குழந்தை வடிவில், ஆதி பாலசுப்பிரமணியர் இருக்கிறார். கைகளில் அட்சர மாலை, கமண்டலத்துடன் இருக்கும் இந்த முருகனே, வள்ளி திருமணத்திற்கு முன்பு இங்கு எழுந்தருளியிருந்தார். மார்கழி திருவாதிரையில் இவருக்கு வெந்நீரால் அபிஷேகிக்கின்றனர். குளிர்காலம் என்பதால், அவர் மீதுகொண்ட அன்பினால், வெந்நீர் அபிஷேகம் செய்யப்படுகிறது.
புத்தாண்டில் படிபூஜை
வருடத்தின் நாட்களைக் குறிக்கும்விதமாக 365 படிகளுடன் அமைந்த கோயில் இது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது, புத்தாண்டில் ஆங்கிலேயர்களைச் சந்தித்து வாழ்த்து கூறுவதை மக்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்தப் பழக்கத்தில் இருந்து மக்களை ஆன்மிக வழியில் திருப்ப, முருகபக்தரான வள்ளிமலை சுவாமிகள் 1917ல், புத்தாண்டில் படிபூஜை செய்து முருகனை வழிபடும் வழக்கத்தைக் கொண்டு வந்தார். புத்தாண்டிற்கு முதல்நாள் இரவில் ஒவ்வொரு படிக்கும் மஞ்சள், குங்குமம் வைத்து கற்பூரம் ஏற்றி பூஜித்து, ஒரு திருப்புகழ் பாடப்படுகிறது. அனைத்து படிகளுக்கும் பூஜை செய்த பின்பு, நள்ளிரவு 12 மணிக்கு முருகனுக்கு விசேஷ பூஜை நடக்கிறது. தமிழ்ப்புத்தாண்டில் 1008 பால் குட அபிஷேகம் நடக்கும்.
நான்கு நாய் பைரவர்
கோயில்களில் பைரவர், வேதத்தின் வடிவமான நாய் வாகனத்துடன் காட்சி தருவார். சில தலங்களில் இரண்டு நாய்களுடன் பைரவரைக் காணலாம். இங்கு நான்கு நாய் வாகனங்களுடன் அவரைத் தரிசிக்கலாம். ஒரு நாய் வழக்கம்போல, பைரவருக்கு பின்புறம் உள்ளது. மற்ற மூன்று நாய்களும் பீடத்தை சுற்றி இருக்கிறது. அவை நான்கு வேதங்களாகக் கருதப்படுகின்றன. கல்வியில் புலமை பெற இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
சித்திரை பிரம்மோற்ஸவத்தில் தெய்வானை திருமணமும், மாசியில் வள்ளி திருமணமும் நடக்கிறது. பள்ளியறை பூஜையின் போது ஒருநாள் தெய்வானையும், ஒருநாள் வள்ளியுமாக முருகனுடன் அருள்செய்கின்றனர். வேடன் வடிவில் சென்று முருகன் வள்ளியை மணந்ததால் பிரம்மோற்ஸவத்தின் ஆறாம் நாளில் புலி வாகனத்திலும், பின்பு யானை வாகனத்திலும் எழுந்தருளுகிறார்.
இத்தல முருகனின் அருளை முஸ்லிம் பக்தர் ஒருவர் பெற்றார். தற்போதும் விழாக்களில், முருகன் புறப்பாடாகும் வேளையில், முஸ்லிம் ஒருவர் முரசு வாத்தியம் இசைக்கிறார். திருச்செந்தூரில் சூரனை வதம் செய்து விட்டு வந்து அமர்ந்து கோபம் தணிந்த தலம். அசுரனோடு மோதியதன் காரணமாக இத்தலத்து மூலவரின் நெஞ்சில் பள்ளம் (துவாரம்) இன்னமும் இருக்கிறதாம். சுவாமி சாந்த சொரூபம். தெய்வேந்திரன் யானையை(ஐராவதம்) தெய்வானைக்கு கல்யாணப் பரிசாக தந்த தலம். இங்கு மூலஸ்தானத்துக்கு முன்பாக மயிலுக்கு பதிலாக யானை உள்ளது.
திருவிழாக்கள்
டிசம்பர் 31 – படித்திருவிழா, ஆடிக்கிருத்திகை, கந்தசஷ்டி
பங்குனி உத்திரம், தைப்பூசம், ஆடித் தெப்பத் திருவிழா
மாதாந்திர கிருத்திகை உற்சவ நாட்களில் ஆயிரக் கணக்கில் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகை தருகின்றனர். இது அல்லாமல் பிரதிவருடம் டிசம்பர் 31, ஜனவரி 1 இல் திருப்புகழ் திருப்படி திருவிழா மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். ஆடிகிருத்திகை திருவிழாவில் தென்னிந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணகான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இத்திருவிழாவின் போது திருத்தணி நகரின் அனைத்துப் பகுதிகளிலும் பக்தர்கள் திரளாக திரண்டு வருகின்றனர். ஆடிக்கிருத்திகை திருவிழாவின் போது சுமார் ஒரு லட்சத்திற்கு மேலான பக்தர்கள் மலர் காவடிகள் எடுத்து முருகனை தரிசிக்க வருகின்றனர். இத்திருவிழாவின் போது இரவு பகல் முழுவதும் பக்தர்கள் போடும் அரோஹரா கோஷம் மற்றும் பக்தர்கள் வரிசையாக ஆடிப் பாடி செல்வது கண்கொள்ளாக் காட்சியாகும்.
திருப்புகழ் திருப்படி திருவிழா
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்த மாநில மக்கள் ஆங்கிலேய வழக்கத்தின்படி புத்தாண்டு கொண்டாடுவதற்கு பதிலாக தமிழ்க்கடவுளின் ஆசி பெற ஆங்கில புத்தாண்டிற்கு முன்தினம் தணிகை மலையில் குழுக்களாக கூடி பஜனைகள் பாடி முருகனை தரிசிக்க வருகின்றனர். தமிழநாட்டைச் சேர்ந்த வள்ளிமலை சுவாமிகள் தமது சீடர்களுடன் மேற்படி பஜனைக் குழுக்களை ஒன்றிணைத்துத் திருவிழாவாக கொண்டடினார். மேற்படி பாடல்கள் பாடி வரும் பஜனைகள் கூட்டம் தற்பொழுது நூற்றுக்கணக்கில் பெருகி டிசம்பர் 31 இல் இரவு வருடத்தின் நாட்களைக் குறிக்கும் விதத்தில் அமைந்துள்ள 365 படிகளுக்கும் பூஜை செய்து படி ஒன்றுக்கும் ஒவ்வொரு பாட்டினை இசைத்து பாடிச் சென்று மலைக்கோயிலைல் சுவாமி தரிசனம்செய்வது இன்றும் தொடர்ந்து வழக்கத்தில் இருந்து வருகிறது. அவ்வாறு பஜனை குழுவினர் பாடும் பாடல்கள் மேற்படி இரு நாட்களிலும் மலையில் எதிரொலித்து வருகிறது. மேலும் அன்றைய தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேல் காவடிகள் எடுத்து இறைவனை தரிசிக்க வருகின்றனர்.
Comments