கிருபாசமுத்திரப்பெருமாள் திருக்கோயில் | Krubhasamudra Perumal Temple

அருள்மிகு கிருபாசமுத்திரப்பெருமாள் திருக்கோயில்

மூலவர்:அருமாகடலமுதன், சலசயனப்பெருமாள்
உற்சவர்:கிருபாசமுத்திரப்பெருமாள், தயாநாயகி
அம்மன்/தாயார்:திருமாமகள் நாச்சியார்
தல விருட்சம்:வில்வ மரம்
தீர்த்தம்:திருவனந்த தீர்த்தம், மானச தீர்த்தம்
ஆகமம்/பூஜை :பாஞ்சராத்ரம்
புராண பெயர்:சலசயனம், பாலவியாக்ரபுரம்
ஊர்:திருச்சிறுபுலியூர்
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு

பாடியவர்கள்:

திருமங்கையாழ்வார் மங்களாசாசனம்

கருமாமுகிலுருவா கனலுருவா புனலுருவா பெருமால் வரையுருவா பிறவுருவா நினதுருவா திருமாமகள் மருவும் சிறுபுலியூர்ச் சலசயனத்து அருமாகடலமுதே உனது அடியே சரணாமே

-திருமங்கையாழ்வார்

திருவிழா:

சித்திரை பிறப்பு, வைகாசி பிரமோற்சவம், ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், ஆடி ஜேஷ்டாபிஷேகம், கோகுலாஷ்டமி, நவராத்திரி பவித்ர உற்சவம், ஐப்பசி மூலத்தில் மணவாள மாமுனிகள் உற்சவம், திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, மகர சங்கராந்தி, மாசி சுக்லபட்ச ஏகாதி, பங்குனி உத்திரம்,

தல சிறப்பு:

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 24 வது திவ்ய தேசம். திருமேனி: புஜங்க சயனம், தெற்கே திருமுக மண்டலம் புலிக்கால் முனிவராகிய வியாக்ரபாதர் வழிபட்டதாலும், பெருமாள் அவருக்கு பாலனாக சயன கோலத்தில் காட்சி தந்ததாலும் இத்தலம் திருச்சிறுபுலியூர் எனப்படுகிறது.

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு கிருபாசமுத்திரப்பெருமாள் திருக்கோயில், திருச்சிறுபுலியூர்- 609 801, திருவாரூர் மாவட்டம்.

போன்:

+91-4366-233 041, 233 826

பொது தகவல்:

இங்கு பெருமாள் நந்தியாவர்த்த விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். தரிசனம் கண்டவர்கள் வியாக்ரபாதர், வியாசர், ஆதிசேஷன்

பிரார்த்தனை

குழந்தை பாக்கியம் வேண்டி ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். மாங்கல்ய தோஷம், கால சர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம், பாலாரிஷ்ட தோஷம், திருமணத்தில் தடை, நவக்கிரக பரிகாரம் செய்ய இருப்பவர்கள் இங்கு வந்து வழிபடுவது சிறப்பு. தீராத நோய், மன நல பாதிப்பு உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்தால் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

தலபெருமை:

பெருமாளின் 108 திருப்பதிகளில் தெற்கு நோக்கி அமைந்த தலங்கள் இரண்டே இரண்டு தான். முதல் தலமான ஸ்ரீரங்கமும், 11வது தலமான திருச்சிறுபுலியூருமே அவை. ஸ்ரீரங்கத்தில் மிகப்பெரிய வடிவில் சயனித்திருக்கும் பெருமாள், திருச்சிறுபுலியூரில் பாலகனாக சயனத்தில் உள்ளார் என்பது இன்னொரு விசேஷம். நடராஜரை வணங்கும் வியாக்ரபாதரும், பதஞ்சலியும் மூலஸ்தானத்திலேயே உள்ளனர்.

பெருமாளின் 108 திருப்பதிகளுள் 11வது தலம் இது. புலிக்கால் முனிவராகிய வியாக்ரபாதர் தில்லை நடராஜப்பெருமானிடம் பல்லாண்டு காலம் தவமிருந்து முக்தி வேண்டினார். இவரது வேண்டுகோளுக்கிணங்க சிவபெருமான், சிறுபுலியூர் சென்று பெருமாளை வணங்க ஆணையிட்டார். அதன்படி இத்தலம் வந்து பெருமாளை வேண்டினார். பெருமாளும் அவருக்கு முக்தி கொடுத்து மூலஸ்தானத்தில் தன் அருகில் வைத்து கொண்டார். நடராஜரின் அருகில் இருக்கும் பதஞ்சலியும் (ஆதிசேஷன்), வியாக்ரபாதரும் மூலஸ்தானத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கன்வ முனிவருக்கும் இத்தலத்தில் பெருமாள் அனுக்கிரஹம் புரிந்தார். இத்தலத்தில் ஆதிசேஷனுக்கும் தனி கோயில் உள்ளது. பெருமாள் பள்ளி கொண்ட தலங்களில் இங்கு மட்டும் தான் குழந்தை வடிவில், சயன நிலையில் உள்ளார்.

பெயர்க்காரணம்: புலிக்கால் முனிவராகிய வியாக்ரபாதர் வழிபட்டதாலும், பெருமாள் அவருக்கு பாலனாக சயன கோலத்தில் காட்சி தந்ததாலும் இத்தலம் “திருச்சிறுபுலியூர்’ எனப்படுகிறது.

தல வரலாறு:

முன்னொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும் கருடனுக்கும் பகை ஏற்பட்டது. இந்த பகை நீங்க ஆதிசேஷன் இத்தல பெருமாளை நோக்கி தவம் இருந்தார். தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் மாசி மாதம், வளர்பிறை ஏகாதசி தினத்தன்று ஆதிசேஷனுக்கு காட்சி கொடுத்தார். அத்துடன் ஆதிசேஷனை அனந்த சயனமாக்கி கொண்டு, குழந்தை வடிவில் சயன கோலத்தில் சேவை சாதிக்கிறார்.

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *