பிரியா ராஜ்வன்ஷ் (Priya Rajvansh) (30 திசம்பர் 1936 – 27 மார்ச் 2000), பிறந்த வீர சுந்தர் சிங் என்ற பெயரில் பிறந்த இவர், ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் ஈர் ராஞ்சா (1970), ஹான்ஸ்டே ஸாக்ம் (1973) போன்ற இந்தி மொழிப் படங்களில் நடித்துள்ளார்.
ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்
பிரியா ராஜ்வன்ஷ் சிம்லாவில் பிறந்தார். இவரது தந்தை சுந்தர் சிங் வனத்துறையில் ஒரு அதிகாரியாக இருந்தார். இவர் தனது சகோதரர்களான கமல்ஜித் சிங் (குலு), பதம்ஜித் சிங் ஆகியோருடன் சிம்லாவில் வளர்ந்தார். இவர் சிம்லாவின் ஆக்லாந்து பள்ளியிலும், கான்வென்ட் ஆஃப் ஜீசஸ் மற்றும் மேரி பள்ளியிலும் படித்தார். அங்கு இவர் பள்ளித் தலைவராக இருந்தார். இவர் 1953ஆம் ஆண்டில் சிம்லாவின் செயின்ட் பேட்ஸ் கல்லூரியில் இடைநிலை தேர்ச்சி பெற்றார். பின்னர், பார்கவா நகரவைக் கல்லூரியில் (பிஎம்சி) சேர்ந்தார். இந்த காலகட்டத்தில், சிம்லாவின் புகழ்பெற்ற கெயிட்டி நாடக நிறுவனத்தின் பல ஆங்கில நாடகங்களில் நடித்தார் .
இவருடைய தந்தைக்கு ஐக்கிய நாடுகள் அவையில் பணி கிடைத்தது. எனவே பட்டம் பெற்ற பிறகு இவர் இங்கிலாந்தின் இலண்டனிலுள்ள புகழ்பெற்ற இராயல் நாடகக்ககலை நாடக அகாதமியில் சேர்ந்தார்.
தொழில்
இலண்டனில் இருந்தபோது, இவரது 22 வயதில் இலண்டன் புகைப்படக் கலைஞர் ஒருவரால் இவரது புகைப்படம் ஒன்று எடுக்கப்பட்டது. அது எப்படியோ இந்தித் திரைப்படத் திரையுலகை அடைந்தது. அந்த காலத்தில் ஒரு திரைப்பட தயாரிப்பாளரான ராஜ்புத் கோட்டா குடும்பத்தைச் சேர்ந்த தாகூர் ரன்பீர் சிங் என்பவர் யூல் பிரைனர் மற்றும் உர்சுலா ஆண்ட்ரஸ் நடித்த பிரபலமான பிரிட்டிசு மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களை எழுதி இயக்கியிருந்தார். மேலும் பீட்டர் ஓ டூல், ரிச்சர்ட் பர்டன் ஆகியோருடன் தொடர்பிலிருந்தார். ரன்பீர் சிங் பிரபல நடிகர் இரஞ்சித்துக்கு முதல் அறிமுகப் படமான “ஜிண்டகி கி ரஹீன்” என்ற படத்தில் வாய்ப்பு வழங்கினார்.
அதைத் தொடர்ந்து, ரன்பீர் சிங் 1962 ஆம் ஆண்டில் சேத்தன் ஆனந்தும் (தேவ் ஆனந்த் ,விஜய் ஆனந்த் ஆகியோரின் சகோதரர்) இவரும் இணைந்து நடித்த ஹக்கீகத் (1964) என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் வெற்றி பெற்றது. மேலும், சிறந்த இந்திய போர்ப் படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. பின்னர், தனது மனைவியிடமிருந்து பிரிந்துவிட்ட இவரது வழிகாட்டியான சேதன் ஆனந்துடன் உறவிலிருந்தார். பிரியா, சேத்தனை விட பல வயது இளையவராவார். அதன்பிறகு, இவர் சேதன் ஆனந்த் படங்களில் மட்டுமே நடித்தார். அவருடைய படங்களில் இவர் கதை, எழுத்து, பாடல், தயாரிப்புக்குப் பிந்தைய ஒவ்வொரு அம்சத்திலும் ஈடுபட்டார். சேத்தன் இவர் இல்லாமல் எந்தவொரு படத்தையும் செய்யவில்லை. மிகவும் திறமையான நடிகையாக இருந்தபோதிலும், இவரது ஆங்கில உச்சரிப்பும் மேற்கத்திய பாணியும் இந்திய பார்வையாளர்களிடம் சரியாகப் போய்ச் சேரவில்லை.
இவரது அடுத்த படமான, ஈர் ராஞ்சா 1970 இல் வெளிவந்தது. இப்படத்தில் இவர், இந்தி நடிகர் ராஜ் குமாருக்கு எதிராக நடித்திருந்தார். இப்படமும் படம் வெற்றி பெற்றது. 1973 ஆம் ஆண்டில் ஹான்ஸ்டே ஜாக்ம் என்றத் திரைப்படம் இவரது தொழில் வாழ்க்கையின் மிகச்சிறந்த திரைப்படமாக வெளிவந்தது. இவரது மற்ற குறிப்பிடத்தக்க படங்கள் ராஜ் குமாருடன் இந்துஸ்தான் கி கசம் (1973), ராஜேஷ் கன்னாவுடன் குத்ரத் (1981) என்ற படத்தில் ஹேம மாலினியுடன் ஒருமுன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். 1977ஆம் ஆண்டில் சாஹேப் பகதூரில் தேவ் ஆனந்த் இணையாக நடித்தார். இவரது கடைசி படம் ஹாத்தன் கி லக்கரன் 1985இல் வெளிவந்தது. அதன் பிறகு இவர் திரைப்பட வாழ்க்கையிலிருந்து வெளியேறினார்.
தனிப்பட்ட வாழ்க்கை
பிரியா ராஜ்வன்ஷ் மற்றும் சேதன் ஆனந்த் ஆகியோரிடையே தனிப்பட்ட உறவு இருந்தது. இவர்கள் ஒன்றாக வாழ்ந்தனர். இருப்பினும் இவரை முதலில் கழுமல் தோட்டத்திலும், பின்னர் மங்கல் கிரானில் ஒரு பெரிய வீட்டிலும் சேத்தன் தங்க வைத்திருந்தார். இவரது இரண்டு சகோதரர்களான கமல்ஜித் சிங் (குலு) மற்றும் பதம்ஜித் சிங் முறையே இலண்டன் மற்றும் அமெரிக்காவில் வசிக்கின்றனர். இவருக்கு சண்டிகரில் ஒரு மூதாதையர் வீடு உள்ளது.
கொலை
1997 இல் சேதன் ஆனந்தின் மரணத்திற்குப் பிறகு, இவர் தனது முதல் திருமணத்திலிருந்து அவரது மகன்களால் சேத்தனின் சொத்தின் ஒரு பகுதியைப் பெற்றார். இந்தியாவின் மும்பை ஜூஹூவில் சேத்தன் ஆனந்தின் ருயா பார்க் மாளிகையில் மார்ச் 27, 2000 அன்று இவர் கொலை செய்யப்பட்டார். சேதன் ஆனந்தின் மகன்களான கேதன் ஆனந்த் மற்றும் விவேக் ஆனந்த் ஆகியோருடன் அவர்களது ஊழியர்களான மாலா சவுத்ரி மற்றும் அசோக் சின்னசாமி ஆகியோர் இவரைக் கொலை செய்ததாக காவலர்கள் குற்றஞ்சாட்டினர். சேத்தன் ஆனந்தின் பரம்பரைச் சொத்தின் உரிமை அவர்களின் நோக்கம் கருதப்பட்டது. ராஜ்வன்ஷின் கையால் எழுதப்பட்ட குறிப்புகள் மற்றும் விஜய் ஆனந்திற்கு இவர் எழுதிய கடிதம் ஆகியவை நீதிமன்றத்தில் முன்கொணரப்பட்டன. கடிதமும் குறிப்புகளும் மர்மமான சூழ்நிலையில் இவரது பயம் மற்றும் பதட்டத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் சூலை 2002இல் குற்றவாளிகள் என கருதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டனர். விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்ட இருவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டை 2011 ல் மும்பை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.