விஜயா மேத்தா (Vijaya Mehta) (பிறப்பு 4 நவம்பர் 1934 ) ஒரு பிரபல இந்திய மராத்தி திரைப்பட மற்றும் நாடக இயக்குனரும், பல இணைத் திரைப்படங்களில் நடிக்கும் ஒரு நடிகரும் ஆவார். மும்பையைச் சேர்ந்த “இரங்காயன்”நாடகக் குழுவின் நிறுவனர் உறுப்பினரான இவர், நாடக ஆசிரியர் விஜய் தெண்டுல்கர் நடிகர்கள் அரவிந்த் தேஷ்பாண்டே, ஸ்ரீராம் லகூ ஆகியோருடன் சேர்ந்து பணியாற்றினார். பார்ட்டி (1984) என்றத் திரைப்படத்தில் பாராட்டப்பட்ட பாத்திரத்துக்காகவும், ராவ் சாஹேப் (1986) மற்றும் பெஸ்டன்ஜி (1988) ஆகிய படங்களுக்காகவும் இவர் மிகவும் பிரபலமானவர். இரங்காயன் நாடகக் குழுவின் நிறுவனர் உறுப்பினராக 1960களின் மராத்தி சோதனை நாடகங்களில் ஒரு முன்னணி நபராக இருந்தார். 1987இல் இவருக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.
ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்
இவர், விஜயா ஜெயவந்த் என்ற பெயரில் குசராத்தின் வடோதராவில் 1934இல் பிறந்தார். இவர் மும்பை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். தில்லியில் இப்ராஹிம் அல்காசி மற்றும் ஆதி மர்ஸ்பானுடன் நாடகத்தைப் பயின்றார்.
தொழில்
இவர் 60களின் மராத்தி சோதனை நாடகங்களில் ஒரு முக்கிய நபராக இருந்தார்.
சி.டி. கானோல்கரின் ஏக் ஷூன்யா பாஜிராவ் என்ற இவரது மேடை தயாரிப்பு சமகால இந்திய நாடக அரங்கில் ஒரு அடையாளமாக கருதப்படுகிறது. ஜெர்மானியக் கவிஞரும், நாடக ஆசிரியருமான பெர்தோல்ட் பிரெக்ட்டின் தி காகசியன் சாக் சர்க்கிள், அயோனெஸ்கோ வித் சேர்ஸ் ஆகியவற்றைத் தழுவி மராத்தி நாடக அரங்குகளில் அறிமுகப்படுத்தினார்.
ஜெர்மன் இயக்குனர் பிரிட்ஸ் பென்னெவிட்சுடன் இந்தோ-ஜெர்மன் நாடகத் திட்டங்களில் இணைந்து பணியாற்றினார். இதில் ஜெர்மன் நடிகர்களுடன் பிரபலமான சமசுகிருத நாடகமான முத்ரா ராக்ஷஸம் என்ற பாரம்பரிய நாடகம் இருந்தது. பெஸ்டன்ஜியைத் தவிர, இவரது பெரும்பாலான படைப்புகள் இவரது மேடை நாடகங்களின் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தழுவல்களைக் கொண்டுள்ளன.
விருதுகள்
நாடகங்களில் சிறந்து விளங்கியதற்காக 1975ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாதமி விருது இவருக்கு வழங்கப்பட்டது. 1986ஆம் ஆண்டில் ராவ் சாஹேப் (1986) திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய திரைப்பட விருதையும் வென்றார்.
சொந்த வாழ்க்கை
இவர் முதலில் நடிகை துர்கா கோட்ட்டின் மகன் ஹரின் கோட் என்பவரை மணந்தார். இருப்பினும் அவர் சிறு வயதிலேயே இறந்தார். அவர் மூலம் இவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். அதன்பிறகு, இவர் பாரூக் மேத்தா என்பவரை மணந்தார்.