பி.டி.லலிதா நாயக் (B.T. Lalitha Naik),(பிறப்பு 4 ஏப்ரல் 1945) ஒரு இந்திய அரசியல்வாதி, எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார்.இவர், கர்நாடக அரசாங்கத்தில் கன்னடம், கலாச்சாரம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையின் முன்னாள் அமைச்சர் ஆவார். லலிதா நாயக் மேல்சபை உறுப்பினராகவும் (எம்.எல்.சி) (1986-1992) மற்றும் சட்டசபை உறுப்பினராகவும் (எம்.எல்.ஏ) (1994-1999) கர்நாடக அரசில் பணியாற்றியுள்ளார். 1991 ல் கர்நாடக சாகித்ய அகாதமி விருதை வென்றார். பந்தய இயக்கம் மற்றும் கோகக் கிளர்ச்சி போன்ற முக்கியமான இலக்கிய, சமூக மற்றும் மொழி-உரிமை இயக்கங்களுக்கு முன்னணி வகித்தவர் .
தனிப்பட்ட வாழ்க்கை
லலிதா நாயக், ஏப்ரல் 4, 1945இல் ஒரு லம்பாடி குடும்பத்தில் பிறந்தார். இவரது பிறந்த ஊர், சிக்மகளூரில் உள்ள கடூரில் இருக்கும் ஒரு சிறிய கிராமமான தெங்கலி தண்டா (இப்போது வி. எல். நகரம் என அழைக்கப்படுகிறது) ஆகும். இவரது பெற்றோர் விவசாயிகளான (மறைந்த) பாலாஜி நாயக் மற்றும் கங்கா பாய் ஆவர்.
1960களின் பிற்பகுதியில், லலிதா நாயக், சம்ப்லா நாயக் என்பவரை மணந்தார். 1996இல், தனது கணவர் இறக்கும் வரை அவருடன் இருந்தார். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.
லலிதா நாயக், பிரபல பரதநாட்டிய நடனக் கலைஞரான கே. வெங்கடலக்சம்மாவின் பேத்தி ஆவார்.
எழுத்துப்பணி
அவரது திருமணத்திற்குப் பிறகு, நாயக், உள்ளூர் அனைத்திந்திய வானொலி நிலையத்திற்கான நடுத்தர வர்க்க வாழ்க்கையின் சோதனைகள் மற்றும் இன்னல்களைப் பற்றி வானொலி நாடகங்களை எழுதத் தொடங்கினார். வானொலி பிரபலத்தால் ஊக்கம் பெற்ற இவர், சுதா(வார இதழ்), பிரஜாவணி மற்றும் தரங்கா போன்ற முக்கிய கன்னட பத்திரிகைகளுக்கு கவிதைகள், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அவரது புதினமான நீலே பேலே, சுதா பத்திரிகை நடத்திய வருடாந்திர குறுங்கதை போட்டியில் ஒரு விருது வென்ற போது, அவர் எழுத்தாளராக அழைக்கப்பட்டார்.
பி. இலங்கேசு, புதிதாக தொடங்கிய இலங்கேசு பத்திரிகையில்” பங்களிப்பு செய்யுமாறு இவரை அழைத்தார். அதனால், லலிதா நாயக் பத்திரிகைக்காக தவறாமல் எழுதத் தொடங்கினார. விரைவில் அவரது உணர்திறன், சமூக அர்ப்பணிப்பு மற்றும் முற்போக்கான பார்வைகளுக்காக அங்கீகரிக்கப்பட்டார். ஒரு எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் என்ற இவரது புகழ் இவரை அன்றைய முதலமைச்சர் ராமகிருஷ்ணா ஹெக்டே கர்நாடக சட்டமன்றக் குழுவின் (எம்.எல்.சி) உறுப்பினராக நியமிக்க வழிவகுத்தது. சிறுகதைத் தொகுப்பு ஹப்பா மட்டு பாலி (“திருவிழா மற்றும் தியாகம்”), கதி புதினம் (“விதி”) மற்றும் கவிதைத் தொகுப்புகள், ஐட் கூகு மேட் மேட் (“அதே அழுகை மீண்டும் மீண்டும்”) போன்ற மறக்கமுடியாத புத்தகங்களை நாயக் தொடர்ந்து எழுதினார். மற்றும் பிதிரு மேலே காந்தியாலி (” மூங்கில் திக்கத்தில்) போன்ற பதினாறு புத்தகங்களை எழுதிய இவர், நாடகங்கள், குழந்தைகள் புனைகதைகள் மற்றும் கட்டுரைகளுக்கும் பெயர் பெற்றவர் ஆவார்.
இவர் 1991 இல் கர்நாடக சாகித்ய அகாதமி விருதை வென்றார். அவரது கதி புதினம், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் இவரது கதைகள் மற்றும் கவிதைகள் ஆங்கிலம், இந்தி, மராத்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது படைப்புகள் கர்நாடகாவில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது.