பல்ராஜ் சஹானி (பஞ்சாபி: بلراج ساہنی , ਬਲਰਾਜ ਸਾਹਨੀ (குர்முகியில்) (1 மே 1913 – 13 ஏப்ரல் 1973), ஒரு புகழ்பெற்ற இந்திய திரைப்பட நடிகர் ஆவார்.இவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவான அகில இந்திய இளைஞர் பெருமன்றதின் முதல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் .
ஆரம்ப வாழ்க்கை
பல்ராஜ் சஹானி 1913 ஆம் ஆண்டு மே மாதம் முதல் நாளில் , ஒருங்கிணைந்த இந்தியாவின் ராவல்பிண்டியில் பிறந்தார். படிப்பதற்காக சொந்த ஊரான ராவல்பிண்டில் இருந்து லாகூருக்கு சென்றார்.அங்கு, ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்ற பின்னர் ராவல்பிண்டிக்கு திரும்பிச் சென்று அவரது குடும்பம் தொழிலில் இணைந்தார்.அவர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் ஹிந்தியில் இளங்கலை பட்டமும் , ஆங்கிலம் முதுநிலை பட்டமும் பெற்றார்.
தொழில் வாழ்க்கை
இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் இந்தியா வந்தவர் , இப்டா (IPTA – Indian People’s Theatre Association) என்கிற அமைப்பை தொடங்கி, நாடகங்கள் நிகழ்த்தினார். 1946இல் வெளியான இன்சாப் என்கிற இந்திப் படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பட பிரவேசத்தை தொடங்கினார். இடதுசாரியாக இருந்தவர், சினிமாவை எப்படி சமூக மாற்றத்திற்காக, நிகழ்கால சமூக பிரச்சினைகளை பதிவு செய்யும் ஊடகமாக மாற்றுவது என்கிற சிந்தனையோடு இயங்கிக் கொண்டிருந்தார். வங்க மொழியில் படங்கள் இயக்கிக் கொண்டிருந்த இந்தியாவின் மிக முக்கியமான திரைப்பட ஆளுமைகளில் ஒருவரான பிமல் ராயின் ‘டூ பிக்ஹா ஜாமீன் (1953)’ என்கிற இந்திப் படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்தியாவில் ஜமீன்தார் என்கிற நிலசுவான்தாரர்களின் அயோக்கியத்தனத்தையும், எளியவர்களை சுரண்டி பிழைப்பு நடத்தும் பணக்கார வர்க்கத்தின் திமிரையும் வெளிச்சம் போட்டுக் காட்டிய படமான இதில் பால்ராஜ், சாம்பு என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் 1954 ஆம் ஆண்டு கான் திரைப்பட விழாவில் விருது வென்றது..இவர் பத்மினி, மீனாகுமாரி ஆகியோருடன் நடித்துள்ளார்.
இடதுசாரி சிந்தனை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவான அகில இந்திய இளைஞர் பெருமன்றதின் முதல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இடதுசாரி சிந்தனைகள் கொண்டவர் என்பதால், அவர் மீது நிறைய வழக்குகள் பாய்ந்து, ஒரு கட்டத்தில் நடிக்க முடியாமல் போகவே, தயாரிப்பாளர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, அவரை நடிக்க அழைத்து வந்தார்கள். நீதிமன்றம் அப்போது சில நிபந்தனைகளோடு அனுமதி அளித்தது. காலை எட்டு மணிக்கு தனியாக ஒரு வேனில் சென்றுவிட்டு, மீண்டும் மாலை ஐந்து மணிக்கு சிறைக்கு வந்துவிட வேண்டும் என்ற அந்த நிபந்தனைக்குட்பட்டு, ஒப்புக்கொண்ட எல்லாப் படங்களிலும் நடித்து முடித்தார்.
படைப்புகள்
ஆரம்ப கால கட்டங்களில் ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருந்தவர் பஞ்சாபிற்கு சென்றதும், பஞ்சாப் இலக்கியத்திற்கு தன்னுடய பங்களிப்பை நல்கினார். தொடர் பயணத்தை விரும்பும் பால்ராஜ், நிறைய பயண இலக்கியங்களை எழுதியுள்ளார். குறிப்பாக பாகிஸ்தான் பயணம் சென்று வந்ததும், ‘மேரா பாகிஸ்தானி சபர்’ என்கிற நூலை எழுதினார். பிறகு ஒருங்கிணைந்த சோவியத்திற்கு சென்று வந்ததும், அதுபற்றி ஒரு புத்தகம் எழுதினார். இந்த நூலுக்கு ‘சோவியத்லேண்ட் நேரு’ என்கிற விருது கிடைத்தது. பஞ்சாப் இதழ்களில் நிறைய சிறுகதைகளும், கவிதைகளும் பால்ராஜ் எழுதியுள்ளார்.
இறப்பு
அவர் கடைசியாக நடித்த, கரம் ஹவா திரைப்படத்தை அவர் இறுதி வரை பார்க்கவில்லை. கரம் ஹவா படத்தின் டப்பிங் வேலைகள் முடித்த அடுத்த நாள், பால்ராஜ் சஹானி மரணமடைந்தார் (1973).