மன்னா தே (Manna Dey, வங்காள: মান্না দে) என்று பெரிதும் அறியப்பட்ட,பிரபோத் சந்திர தே (1 மே, 1919 – 24 அக்டோபர் 2013), இந்தி மற்றும் வங்காள திரைப்படங்களில் 1950 – 1970 காலகட்டங்களில் மக்களால் மிகவும் விருப்பப்பட்ட பின்னணி பாடகராவார். தமது வாழ்நாளில் 3500 பாடல்களுக்கும் கூடுதலாக பாடல்களை பதிவு செய்துள்ளார். 2007ஆம் ஆண்டுக்கான தாதாசாஹெப் பால்கே விருது பெற்றவர்.பத்மஸ்ரீ.பத்மபூசண் விருதுகள் பெற்றவர்.
வாழ்க்கை வரலாறு
பூர்ண சந்திர தே மற்றும் மகாமாயா தே தம்பதியினருக்கு பிறந்தார். தமது தந்தையின் உடன்பிறப்பான இசையாசிரியர் கே சி தேயின் தாக்கத்தால் இசையின்பால் ஆர்வமிக்கவரானார். இந்து பாபர் பாடசாலையில் துவக்கக் கல்வியும்,ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரி பள்ளியிலும் பின் கல்லூரியிலும் உயர்கல்வியும் பெற்றார். வித்யாசாகர் கல்லூரியில் பட்டப்படிப்பு மேற்கொண்டார்.
கே சி தே மற்றும் உசுதாது தாபீர் கான் இவர்களிடம் இந்துஸ்தானி இசையை முறையாக பயின்றார். கல்லூரிகளுக்கிடையேயான இசைப்போட்டிகளில் முதல் பரிசுகள் பெற்று வந்தார்.
1942ஆம் ஆண்டு மும்பை சென்று இசையமைப்பாளர் சச்சின் தேவ் பர்மனிடம் உதவியாளராகச் சேர்ந்தார். பின்னர் மற்ற இசையமைப்பாளர்களிடமும் உதவியாளராக பணி புரிந்தார். அப்போது இணையாக தமது இந்துஸ்தானி பயிற்சியை உசுதாது அமன் அலி கான் மற்றும் உசுதாது அப்துல் ரகுமான் கானிடம் தொடர்ந்து வந்தார்.
1943ஆம் ஆண்டு தமன்னா என்ற திரைப்படத்தில் பின்னணிப் பாடகராக தமது திரையிசைவாழ்க்கையை துவங்கினார். பின்னர் இந்தி,வங்காள மொழி திரைப்படங்களில் பல நினைவு நீங்கா பாடல்களைப் பாடி முதன்மைநிலை எய்தினார்.
மலையாளத்தில் செம்மீன் என்ற திரைப்படத்தில் மானச மஞ்யு வரூ என்ற பாடல் தென்னிந்திய திரையுலகிற்கு இவரை அறிமுகம் செய்தது.
தனி வாழ்க்கை
கேரளாவின் சுலோசனா குமாரனை திசம்பர் 18, 1953இல் திருமணம் செய்து கொண்டார். சுரோமா,சுமிதா என இரு மகள்கள் உள்ளனர். மும்பையில் ஐம்பது ஆண்டுகள் வாழ்ந்தபிறகு தற்போது பெங்களூருவில் கல்யாண்நகர் பகுதியில் வசித்து வருகிறார். இன்றும் உலகெங்கும் இசைப்பயணங்கள் மேற்கொள்கிறார்.
இவரது சுயசரிதை வங்காளத்தில் ஜீபோனேர் ஜல்சகோரே என்றும், இந்தியில் யாதேன் ஜீ உதி என்றும், மராத்தியில் ஜீபோனேர் ஜல்சகோரே என்றும் ஆங்கிலத்தில் மெமொரீஸ் கம் அலைவ் என்றும் பதிப்பிக்கப்பட்டுள்ளன.