பாடகர் சிறுகளத்தூர் சாமா | Singer Serukalathur Sama

சிறுகளத்தூர் சாமா (Serukalathur Sama, சூன் 26, 1904 – ) அல்லது செருகளத்தூர் சாமா ஒரு தமிழ்த் திரைப்பட நடிகரும், பாடகரும் ஆவார். இவர் பொதுவாகவே புராணக் கதைகளுடன் சம்பந்தப்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதிலும் இவர் கிருஷ்ணர் வேடத்தில் அதிக முறை நடித்துள்ளார். இவர் 1930 ஆம் 40 ஆம் ஆண்டுக் காலங்களில் திரைப்படங்களில் நடித்தார்..


இளமைக் காலம்


சாமாவின் இயற்பெயர் சுவாமிநாதன் என்பதாகும். தஞ்சாவூரில் சிறுகளத்தூர் என்ற ஊரில் மிராசுதாரராக இருந்த வைத்தியநாதய்யர் என்பவருக்குப் பிறந்தார். சாமாவின் ஐந்தாவது வயதில் தாயார் இறந்து விடவே, தந்தையார் மறுமணம் செய்து கொண்டார். இதனால் தாய்மாமன் இவரை தஞ்சைக்கு அழைத்துச் சென்று அங்குள்ள கல்யாணசுந்தரம் உயர்நிலைப் பள்ளியில் சேர்த்தார். அத்துடன் கருநாடக இசையையும் கற்றுக் கொண்டார். எஸ்.எஸ்.எல்.சி சோதனையில் சித்தி பெற்ற பின்னர் திருமணம் புரிந்து கொண்டார். இவருக்கு மூன்று பெண் பிள்ளைகள். திருமணம் முடித்த பின்னர் வேலை தேடும் பொருட்டு தம்பியுடன் சென்னை சென்றார். அங்கு இந்தியக் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் எழுத்தராக வேலை கிடைத்தது. இரண்டு மாதங்கள் அங்கு பணியாற்றிய பின்னர் சென்னை காஸ்மாபாலிட்டன் கிளப்பில் எழுத்தராகப் பத்து ஆண்டு காலம் பணியாற்றினார். இங்கு பணியாற்றிய காலத்தில் இவரது சில பாடல்களை ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ் நிறுவனத்தினர் இசைத்தட்டுகளில் வெளியிட்டனர். இதனால் இவருக்கு நாடகங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.


திரைப்படங்களில் பணி


ஜி.பி.சி. ஸ்டூடியோவில் மேக்கப்மேன் ஆகப் பணியாற்றிய மாமா ராஜு என்பவர் சாமாவை நேசனல் மூவிடோன் ஸ்டூடியோவுக்கு அறிமுகப்படுத்தினார். அவர்களது முதல் படமான வள்ளி கல்யாணம் படத்தில் நாரதராக நடித்தார். அதன் பின்னர், இயக்குனர் ஏ. நாராயணனின் கீழ் பணியில் சேர்ந்தார். ஓராண்டு காலம் அவருடன் பணியாற்றிய பின்னர் திரௌபதி வஸ்திராபகரணம் (1934) திரைப்படத்தில் கிருஷ்ணனாக வேடமேற்று நடித்தார். தொடர்ந்து மாயா பஜார் (1935), கருடகர்வ பங்கம், பாமா பரிணயம், சிந்தாமணி ஆகிய அடுத்தடுத்த படங்களில் கிருஷ்ணன் வேடத்திலேயே நடித்தார். சிந்தாமணி படத்தில் இவர் பாடிய பாடல்கள் இவருக்குப் புகழ் தேடித் தந்தன. பின்னர் அம்பிகாபதி படத்தில் கம்பன் வேடத்தில் நடித்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.


பாரத் பிக்சர்சு என்ற பெயரில் தனது சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை சாமா ஆரம்பித்தார். இதன் மூலம் 1940 ஆம் ஆண்டில் ஷைலக் என்ற திரைப்படத்தைத் தயாரித்து வெளியிட்டார். இப்படத்தில் அவர் ஷைலக்காக நடித்தார். இப்படம் அவருக்குப் பெரும் நட்டத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் தொடர்ந்து சுபத்ரா அர்ஜூனா (1941), ராஜசூயம் (1942) என இரண்டு திரைப்படங்களைத் தயாரித்தார். இப்படங்களும் தோல்வியடையவே, கம்பனியை மூடி விட்டார்.


சிறிது காலத்தின் பின்னர் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.


பட்டங்கள்


  • நடிகமணி என்ற பட்டத்தை சுத்தானந்த பாரதியார் வழங்கினார்.

  • திரை அரசன் என்ற பட்டத்தை நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை வழங்கினார்.

  • நடித்த திரைப்படங்கள்

    1934 திரௌபதி வஸ்திராபகரணம்
    1937 சிந்தாமணி
    அம்பிகாபதி
    1943 சிவகவி
    1942 நந்தனார்
    1950 பீதல பாட்லு
    ஏழை படும் பாடு
    1962 பட்டினத்தார்

    வெளி இணைப்புகள்

    பாடகர் சிறுகளத்தூர் சாமா – விக்கிப்பீடியா

    Singer Serukalathur Sama – Wikipedia

    About the author

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *