இசையமைப்பாளர் எல். வைத்தியநாதன் | Music Director L. Vaidyanathan

லட்சுமிநாராயண வைத்தியநாதன் ( Lakshminarayana Vaidyanathan) (பிறப்பு: 1942 ஏப்ரல் 9 – இறப்பு: 2007 மே 17) இவர் ஒரு புகழ்பெற்ற இசைக்கலைஞரும், இசை இயக்குனரும் மற்றும் இசையமைப்பாளரும், கர்நாடக இசை பாரம்பரியத்தில் பயிற்சி பெற்றவருமாவார். வைத்தியநாதன் சென்னையில் வி.லட்சுமிநாராயணன் மற்றும் சீதாலட்சுமி ஆகிய இருவருக்கும் பிறந்தார். திறமையான வயலின் கலைஞர்களான எல்.சங்கர் மற்றும் எல். சுப்பிரமணியம் ஆகியோரின் மூத்த சகோதரர் ஆவார் மால்குடி நாட்கள் என்ற பிரபல தொலைக்காட்சித் தொடரின் இசையை இவர் உருவாக்கினார். இந்த மூன்று சகோதரர்களும் தங்கள் தந்தையிடமிருந்து இசை பயிற்சி பெற்றனர்.


தொழில்


திரைப்பட இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேசின் உதவி இசை இயக்குநராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய வைத்தியநாதன், தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 170க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் தமிழில் பேசும் படம், சந்தியா ராகம், ஏழாவது மனிதன், தசரதன் மற்றும் மறுபக்கம் மற்றும் கன்னடத்தில் அபரிச்சிதா, குபி மாத்து ஐயலா, ஒண்டு முத்தினா கதே ஆகியவை அடங்கும். நாட்டின் மிகச் சிறந்த இசை அமைப்பாளர்களில் ஒருவரான இவர், ஒலிக் கலவையில் இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் வருவதற்கு முன்பாகவே, அரிய மற்றும் அறியப்படாத கருவிகளைப் பயன்படுத்துவதற்கும், மாண்டலின், புல்லாங்குழல் மற்றும் வயலின் ஆகியவற்றிலிருந்து ஒலிகளை நுட்பமாக பல்வேறு நாட்டு தாளக் கருவிகளுடன் கலப்பதற்கும் அறியப்பட்டார். இசையமைப்பாளர் சி. அஷ்வத்துடன் இணைந்து , அஸ்வத்-வைத்தி என்ற பெயரில் பல கன்னடத் திரைப்படங்களுக்கு இசையமைத்தார். இவரது ஒரு கவர்ச்சியான மற்றும் நீடித்த அமைப்பு, சங்கர் நாக் இயக்கத்தில் வெளியான மால்குடி நாட்களின் (தொலைக்காட்சித் தொடர்) தொடக்க மற்றும் நிறைவு இசையான ‘தானா நா நானா’ என்பதாகும்


2003 ஆம் ஆண்டில், திரைப்படத்தில் இவரது சிறப்பான பங்களித்ததற்காக தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கியது.


வெளி இணைப்புகள்

இசையமைப்பாளர் எல். வைத்தியநாதன் – விக்கிப்பீடியா

Music Director L. Vaidyanathan – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *