உஸ்தாத் பகதூர் கான் (Bahadur Khan) (பிறப்பு 19 சனவரி 1931 – 3 அக்டோபர் 1989) பகதூர் உசைன் கான் என்றும் அறியப்பட்ட இவர் ஓர் இந்திய சரோத் இசைக் கலைஞரும், திரைப்பட இசையமைப்பாளருமாவார்.
ஆரம்பகால வாழ்க்கையும் குடும்பமும்
உஸ்தாத் பகதூர் கான், ஒரு பெங்காலி, சனவரி 19, 1931 இல் வங்காளதேசத்தின் கொமிலாவில் உள்ள சிபூரில் (அப்பொழுது பிரித்தானிய இந்தியா ) பிறந்தார். ஒரு இசைக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், இந்திய பாரம்பரிய இசைக்கலைஞர் ஆயித் அலிகானின் மகனும், சித்தார் கலைஞர் பண்டிட் ரவிசங்கருடன் தொடர்புடையவர் .
இறுதியாக கொல்கத்தாவில் குடியேறுவதற்கு முன்பு, கான் தனது தந்தை மற்றும் தனது மாமா அலாவுதீன் கானிடமிருந்து மைகாரில் சரோத் வாசிக்க முதலில் கற்றுக்கொண்டார். இவர் குரல் இசையையும் பயின்றார், பின்னர் அவரது உறவினர்களான அலி அக்பர் கான், அன்னபூர்ணா தேவி ஆகியோருடன் ஒத்துழைத்தார்.
இவரது சகோதரர்கள் ஆபேத் உசைன், முபாரக் உசைன் கான் ஆகியோரும் வங்காளதேசத்தை தளமாகக் கொண்ட இசைக்கலைஞர்கள். மேலும், பாரம்பரிய இசையில் பங்களித்ததற்காக வங்காளதேச அரசாங்கத்திடமிருந்து விருது பெற்றவர்கள். 2006 ல் இறந்த சித்தார் கலைஞர் கிரித் கான் இவரது மகனாவார். நன்கு அறியப்பட்ட மாணவர்களில் ஒருவர் சரோத் கலைஞர் தேசேந்திர நாராயண் மசூம்தார் என்பவராவார் .
இவர் அக்டோபர் 3, 1989 அன்று கொல்கத்தாவில் காலமானார். இவரது மூத்த மகன் பித்யுத் கான் தொடர்ந்து உலகம் முழுவதும் சரோத் நிகழ்த்துகிறார்.
இசையும் படங்களும்
அகில இந்திய வானொலி, வானொலி பாக்கித்தான் மற்றும் வானொலி வங்காளதேசம் போன்றவற்றில் கான் ஒரு வழக்கமான கலைஞராக இருந்தார். புகழ்பெற்ற இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் ரித்விக் கட்டக்கின் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
கற்பித்தல்
கான் ஒரு புகழ்பெற்ற ஆசிரியராகவும், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள அலி அக்பர் இசைக் கல்லூரியில் ஆறு மாதங்கள் ஆசிரிய உறுப்பினராகவும் இருந்தார். அங்கு இவர் இந்திய பாரம்பரிய இசையை கற்பித்தார். இவரது மாணவர்களில் இவரது மகன் பித்யுத் கான், மருமகன் சாகா தத் உசைன் கான், தேசேந்தி ரநாராயண் மசூம்தார், கல்யாண் முகர்ஜி, மனோஜ் சங்கர் அவரது மருமகன் குர்ஷித் கான் ஆகியோரும் அடங்குவர்.