உருகுவை அல்லது உருகுவே (Uruguay) தென் அமெரிக்க நாடாகும். இது வடக்கே பிரேசிலுடனும் கிழக்கே அர்ஜென்டினாவுடனும் எல்லைகளைக் கொண்டுள்ளது. உருகுவை ஆறும், வெள்ளி ஆறு என்றழைக்கப்படும் ரியோ தெ லா ப்ளாதா (Rio de la Plata) என்ற ஆறும் அர்ஜெண்டின எல்லையை ஒட்டி இருக்கின்றன. கிழக்கில் அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளது. மக்கட்டொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் தலைநகர் மொண்டிவிடியோவில் வசிக்கின்றனர். தென்னமெரிக்கக் கண்டத்தில் நிலப்பரப்பில் இரண்டாவது சிறிய நாடு(மிகச்சிறிய நாடு சுரினாம்). உருகுவை அரசியல் மற்றும் பொருளாதார அடிப்படையில் நிலையாக இருக்கிறது.
வரலாறு
உருகுவை என்ற பெயர் பழங்குடி மக்களின் மொழியான குரானி என்பதில் இருந்து வந்தது. இதற்கு ‘பறவைகளின் ஆறு’ (river of the painted birds) என்று பொருள்.
16-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஐரோப்பியர்கள் இங்கு வரத் தொடங்கினர். ஸ்பெயினும் போர்ச்சுகலும் உருகுவேயை ஆக்கிரமித்தன. காலப்போக்கில் உருகுவே ஸ்பெயினின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. தற்போதைய தலைநகரான மாண்டிவிடியோ 18-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் உருவாக்கப்பட்டது. ‘பொய்னஸ் ஏரிஸ்’ (Buenos Aires) வர்த்தக மையமாகவும் மாண்டிவிடியோ இராணுவ (படை) மையமாகவும் செயல்பட்டன.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் உருகுவே உட்பட தென் அமெரிக்கா முழுதும் விடுதலை இயக்கங்கள் வலுப்பெற்றன. பின்னர் அண்டை நாடுகளான பிரேசில் மற்றும் அர்கெந்தீனா என்பவற்றின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. Provincia Cisplatina என்ற பெயரில் பிரேசிலின் ஒரு பகுதியாக இருந்தது. ஆகஸ்ட் 25,1825 அன்று விடுதலைப் போராட்டம் துவங்கியது. பின்னர் ‘மாண்டிவிடியோ உடன்படிக்கை’ யின் மூலம் 1828-ஆம் ஆண்டு விடுதலை அடைந்தது.
பழங்குடி இனமான ‘சருவா’ காலப்போக்கில் அழிந்துவருகிறது, ஏப்ரல் 11, 1831 அன்று சல்சிபுதிஸ்(Salsipuedes) என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான சருவா இனத்தவர் படுகொலை செய்யப்பட்டனர். உருகுவையின் முதல் அதிபரான ஜெனரல் புரக்டோசா ரிவேரா(General Fructuoso Rivera) முன்னிலையில் இந்த கொடிய சம்பவம் அரங்கேறியது. அதன் பின்னர் சருவா இன மக்கள் உருகுவேயிலிருந்து வெளியேறினர். 1833-ஆம் ஆண்டு நான்கு சருவா இனத் தலைவர்கள் – செனாக்யு (Senaque), வைமெக்க பிரு (Vaimaca Piru), தகுபே (Tacuabe) மற்றும் அவர் மனைவி குய்னூசா (Guyunusa) ஆகியோர் பாரீசுக்கு இழுத்துச் செல்லப்பட்டு அங்கு ஒரு கேளிக்கை அரங்கில் காட்சிப் பொருளாக நிற்க வைக்கப்பட்டனர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பராகுவேக்கு எதிரான போரில் உருகுவை பங்கெடுத்தது.
விளையாட்டுக்கள்
இங்கு கால்பந்து ஆட்டமே மிகவும் புகழ் பெற்ற விளையாட்டாகும்.