மாலி (Mali, மாலிக் குடியரசு, பிரெஞ்சு மொழி: République du Mali), மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். ஆபிரிக்காவில் ஏழாவது பெரிய நாடு இதுவாகும். இதன் எல்லைகளாக வடக்கே அல்ஜீரியா, கிழக்கே நைஜர், தெற்கே புர்கினா பாசோ, மற்றும் ஐவரி கோஸ்ட் ஆகியனவும், தென்மேற்கே கினி, மேற்கே செனெகல், மற்றும் மௌரித்தானியா ஆகியனவும் அமைந்துள்ளன. மாலியின் வடக்கெல்லை சகாராப் பாலைவனம் வரை நீண்டுள்ளது. அதேவேளை மக்கள் அதிகம் வாழும் இதன் தெற்கெல்லை நைஜர் மற்றும் செனெகல் ஆற்றுப் படுகை வரை நீண்டுள்ளது.
பிரெஞ்சு சூடான் என முன்னர் அழைக்கப்பட்ட இந்நாடு மாலிப் பேரரசின் நினைவாக மாலி என்ற பெயரைப் பெற்றது. இப்பெயர் நீர்யானையின் பம்பாரா மொழிப் பெயரடியில் இருந்து மருவியது. மாலியின் தலைநகரம் பமாக்கோ என்பது பம்பாரா மொழியில் “முதலைகளின் இடம்” என்ற பொருள் கொண்டது்.
வரலாறு
1880இல் மாலி பிரான்சின் முற்றுகைக்குள்ளாகி அதன் குடியேற்ற நாடாகியது. இது பிரெஞ்சு சூடான் அல்லது சூடானியக் குடியரசு என அழைக்கப்பட்டது. 1959இன் துவக்கத்தில், மாலி, செனெகல் ஆகியன மாலிக் கூட்டமைப்பு என்ற பெயரில் இணைந்தன. இக்கூட்டமைப்பு ஜூன் 20, 1960இல் பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது. சில மாதங்களில் இக்கூட்டமைப்பில் இருந்து செனெகல் விலகியது. மாலிக் குடியரசு, மொடீபோ கெயிட்டா தலைமையில் செப்டம்பர் 22, 1960இல் பிரான்சிடம் இருந்து விலகியது.
1968இல் இடம்பெற்ற இராணுவப் (படைத்துறைப்) புரட்சியில் மொடீபோ கெயிட்டா சிறைப்பிடிக்கப்பட்டார். அதன் பின்னர் “மவுசா ட்ர்றோரே” என்பவர் 1991 வரை ஆட்சியில் இருந்தார். அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடுத்து 1991இல் மீண்டும் இராணுவப் (படைமுகப்) புரட்சி இடம்பெற்றது. 1992இல் “அல்ஃபா ஔமார் கொனாரே” என்பவர் மாலியின் முதலாவது தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தார். 1997இல் மீண்டும் இவர் அதிபரானார் (தலைவரானார்). 2002இல் இடம்பெற்ற தேர்தலில் அமடூ டுமானி டவுரே அதிபராகி இன்று வரை ஆட்சியில் உள்ளார். இன்று மாலி ஆப்பிரிக்காவில் ஒரு நிலையான ஆட்சியுள்ள நாடாகத் திகழ்கிறது.
இனக்குழு
மாண்டே (Mande) 50% (பம்பாரா, மாலின்கே, சோனின்கே), பெயூல் (Peul) 17%, வோல்ட்டாயிக் (Voltaic) 12%, சொங்காய் (Songhai) 6%, டுவாரெக் மற்றும் மூர் (Moor) 10%, ஏனையோர் 5%
மதம்/சமயம்
இஸ்லாம் 90%, பழங்குடிகளின் மதம் 9%, கிறிஸ்தவம் 1%
பொருளாதாரம்
மாலி நாட்டின் பொருளாதார விவகாரங்களை மத்திய மேற்கு ஆப்பிரிக்க வங்கியும், மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகமும் ஒன்றாக இணைந்து கவனித்துக் கொள்ளுகின்றன. உலகிலேயே மிகவும் ஏழ்மையான நாடு இது. ஒரு தொழிலாளியின் ஆண்டு வரிமானம் 97,500 ரூபாய் ($ 1,500 டாலர்கள்) மட்டுமே.
விவசாயம்
இந்நாட்டின் முக்கிய தொழிலே விவசாயம் ஆகும். இங்கு உற்பத்தி செய்யப்படும் பருத்தியானது மேற்கத்திய நாடுகளான செனகல், ஐவரி கோஸ்ட் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 2002 ஆம் ஆண்டில் மட்டும் 620,000 டன் பருத்தி உற்பத்தி செய்யப்பட்டது, ஆனாலும் 2003 ஆம் ஆண்டில் விலையில் முன்னேற்றம் எதுவுமில்லாமல் வீழ்ச்சியையே சந்தித்தது. பருத்தியைத் தவிர்த்து நெல், பருப்பு வகைகள், மக்காச்சோழம், காய்கறிகள், மரச்சாமான்கள், தங்கம், விலங்கினங்கள் என்பனவையும் சேர்த்து 80% அளவுக்கு ஏற்றுமதி செய்கிறது. இங்கு 80% மக்கள் விவசாயத்தையே நம்பி வாழுகிறார்கள். மேலும் 15% மக்கள் தான் வேறு பொது பணியில் ஈடுபடுகிறார்கள். இது போக மேலும் உள்ளவர்கள் வேலையற்றவர்களாக ஏதும் கிடைத்த வேலையைப் பார்த்துக்கொண்டு வாழுகிறார்கள். மாலி பருத்தி உற்பத்தியில் சிறந்து விளங்கினாலும் சரியான விலை கிடைப்பதற்கு அமெரிக்காவின் கொள்கையும் ஒரு காரணம் ஆகும். அமெரிக்கா அவர்களின் பருத்தி விவசாயிகளுக்கு அதிகமான மானியம் வளங்குகிறது. இதனால் உலக சந்தையில் மாலி நாட்டு பருத்திக்கு முக்கியத்துவம் கிடைக்காமல் விலை விழ்ச்சியை சந்திக்க வேண்டியுள்ளது.
கலை பண்பாடு
90% வீதமானோர் சுன்னி இஸ்லாமியப் பிரிவைப் பின்பற்றுகின்றனர்.