பலஸ்தீன நாடு (State of Palestine, அரபு:دولة فلسطين, dawlat filastin, எபிரேய மொழி: מדינת פלסטין, medinat phalastin ) என்பது இஸ்ரேல் நாட்டால் ஆக்கிரமிப்புக்கு உள்ளான பலஸ்தீன மக்களுக்காக உருவாக்கப்பட இருக்கும் நாட்டுக்குக் கொடுக்கப்பட்ட பெயர் ஆகும். இது ஒரு சுதந்திரமான நாடு அல்ல. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் உயர் பீடமான பாலஸ்தீன தேசிய கவுன்சில் நவம்பர் 15, 1988 இல் அல்ஜீரியாவில் கூடி ஒருதலைப்பட்ச விடுதலைப் பிரகடனத்தை வெளியிட்டது.
புவியியல்
பாலஸ்தீன நாடு மேற்குக் கரை மற்றும் காசா ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். ஜெருசலேம் அதன் தலைநகராகும்.
மொழிகள்
அலுவலக மொழியாக அரபி மொழி உள்ளது.ஹீப்ரு மொழியும் பேசப்படுகிறது.
மக்கள்தொகை
பாலஸ்தீனிய மத்திய புள்ளிவிபர பணியகம் படி, பாலஸ்தீன நாட்டின் 2013 இல் மக்கள் தொகை 4,420,549 ஆகும். நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி சதுர கிலோமீட்டர்க்கு 731 மக்கள் என்று உள்ளது.
சமயம்
Religion of Palestinians (est. 2014)
பாலத்தீன நாட்டில் 93% மக்கள் இசுலாம் சமயத்தை பின்பற்றுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் சுன்னத் பிரிவை சார்ந்தவர்கள், அகதியாக முசுலிம்கள் சிறிய அளவில் உள்ளனர்.பாலத்தீன கிறித்தவர்கள் 6% உள்ளனர். டுருஸ் சமயத்தவர் சிறிய அளவில் உள்ளனர்.யூதர்களும் அங்கு உள்ளனர்.
விளையாட்டு
கால்பந்து பாலஸ்தீன மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான விளையாட்டாக இருக்கிறது.ரக்பியும் ஒரு பிரபலமான விளையாட்டாக இருக்கிறது.
கல்வி
பாலத்தீனத்தின் மேற்குக் கரையில் சுமார் 7 பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன.
உலக நாடுகளின் அங்கீகாரம்
“பலஸ்தீன நாடு” உடனடியாகவே அரபு லீக் நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டடது. ஐக்கிய நாடுகள் இதனை இதுவரையில் அங்கீகரிக்கவில்லை. 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் நாள் ஐ.நா. பாலத்தீனத்தை “பார்வையாளர் நாடு” (observer state) என்னும் நிலைக்கு உயர்த்தியது. ஐரோப்பிய ஒன்றியம் பாலத்தீனத்தை முழு இறையாண்மை கொண்ட நாடாக அங்கீகரிக்காவிடினும், அது பலஸ்தீனத்துடன் தூதரக உறவைப் பேணி வருகிறது.
பலஸ்தீன நாட்டை அங்கீகரித்த நாடுகள்
செப்டம்பர் 2011 வரை, ஐக்கிய நாடுகள் அவையின் 193 நாடுகளும் 127 (65.8%) பலஸ்தீன நாட்டை அங்கீகரித்துள்ளன. இருபதுக்கும் மேற்பட்டவை ஓரளவு தூதரக உறவைப் பேணிவருகின்றன.
தலைநகர் பற்றிய சர்ச்சை
விடுதலைப் பிரகடனம் வழியாகப் பலத்தீனம் தன் தலைநகரம் எருசலேம் என்று அறிவித்தாலும், நடைமுறையில் இன்று எருசலேம் இசுரயேல் நாட்டின் தலைநகராகவே இசுரயேலால் கருதப்படுகிறது. இவ்வாறு பன்னாட்டளவில் எழுந்த சர்ச்சை இன்னும் தீர்வு பெறவில்லை.
பாலத்தீனம் ஐ.நா.வில் “நிலையான பார்வையாளர் நாடு” நிலை பெறுதல்
2012, ஆகத்து மாதத்தில் பாலத்தீன வெளியுறவு அமைச்சர் ரியாத் அல்-மால்க்கி, ரமால்லாவில் செய்தியாளர்களிடம், பாலத்தீனம் ஐ.நா. பொது அவையில் “உறுப்பினர் நிலை இல்லா, பார்வையாளர் நிலை” பெறுவதற்கு விண்ணப்பிக்கப் போவதாகக் கூறினார்.
2012, நவம்பர் மாதம் 29ஆம் நாள் ஐ.நா. பொதுப்பேரவை 67/19 தீர்மானத்தை நிறைவேற்றி, பாலத்தீனத்துக்கு “அமர்வோர்” (entity’) நிலையிலிருந்து “உறுப்பினர் இல்லா, பார்வையாளர் நாடு” (non-member observer state) என்னும் நிலை வழங்கியது. தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த நாடுகள் 138. எதிர்ப்பு வாக்குகள் 9; நடுநிலை வகித்தோர் 41. இவ்வாறு பாலத்தீனம் இறையாண்மை கொண்ட நாடு என்பது உள்முகமாக ஏற்கப்பட்டுள்ளது.
ஐ.நா.வில் பாலத்தீனம் அடைந்த நிலையின் விளைவுகள்
2012, நவம்பர் 29ஆம் நாள் பாலத்தீனம் “பார்வையாளர் நாடு” என அங்கீகரிக்கப்பட்டதால் என்ன விளைவுகள் ஏற்பட்டன என்பது குறித்து பல கருத்துகள் உள்ளன.
இந்த ஐ.நா. பொதுப் பேரவை வாக்கெடுப்பின் விளைவாக உலகின் மிகப் பெரும்பான்மையான நாடுகள் பாலத்தீன நாடு முழு இறையாண்மை கொண்ட நாடாக உருவாகிட ஆதரவு தெரிவிக்கின்றன. தற்போது பாலத்தீனத்தின் முதல்வரான மம்மூது அப்பாஸ் (Mahmoud Abbas) இந்த வாக்கெடுப்பின் விளைவாக அதிக வன்மை பெறுகிறார் என்றும், அவரது கட்சிக்கு எதிரான ஹமாஸ் கட்சியின் தீவிரப்போக்கைவிட காசா பகுதியில் அவருக்கு ஆதரவு பெருகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாலத்தீனத்தில் மேற்குக் கரையில் ரமால்லாவிலிருந்து நியூயார்க் சென்று அங்கு ஐ.நா. பேரவையில் உரையாற்றிய அப்பாஸ் பின்வருமாறு கூறினார்: “ஆக்கிரமிப்பும், (இசுரயேலின்) சட்ட எதிரான குடியேற்றமும் நிலக் கைப்பற்றலும் நிறுத்தப்பட வேண்டும் என்று உலக நாடுகள் தெளிவாகக் கூறவேண்டிய நேரம் வந்துவிட்டது.”
பாலத்தீனத்துக்கு “பார்வையாளர் நாடு” என்னும் நிலை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து ஐ.நா. பேரவை மன்றத்தில் அந்நாட்டின் தேசிய கொடி உயர்த்தப்பட்டது.
அந்த நிகழ்ச்சியைச் சிறப்பிப்பதற்காக, பாலத்தீனத்தின் ரமால்லாவில் யாசர் அரபாத் வளாகத்தில் பன்னூறு மக்கள் ஒன்று கூடி, கைகளில் கொடி அசைத்து தேசிய பாடல்கள் இசைத்தனர்.
அப்பாஸ் ஆற்றிய உரையில், பாலத்தீனத்தின் விடுதலைப் போராட்டம் பற்றிக் குறிப்பிட்டார். பிரித்தானியர் பாலத்தீனத்தை யூதப் பகுதி என்றும் அரபுப் பகுதி என்றும் இரண்டாகப் பிரித்த 65ஆம் ஆண்டு நிறைவின்போது, ஐ.நா. வாக்கெடுப்பு 2012, நவம்பர் 29ஆம் நாள் நிகழ்ந்ததன் உட்பொருளை அவர் சுட்டிக்காட்டினார். பாலத்தீனம் தனி நாடாக உருவெடுத்து செயல்படுமா என்பது குறித்து கடந்த பல பத்தாண்டுகளில் ஐயப்பாடு ஏற்பட்டாலும், அதிசயமான விதத்தில் “தனி நாடு” என்னும் கருத்து நிலைத்து நின்றுள்ளது.
பாலத்தீனம் என்பது தனி இறையாண்மை கொண்ட ஒரு “நாடு” என்பதற்கு ஐ.நா.வின் உறுப்பு நாடுகள் “பிறப்புச் சான்றிதழ்” அளிக்க அழைக்கப்படுகின்றன என்று அவர் கூறினார்.
இசுரயேலின் நிலைப்பாடு
பாலத்தீனத்திற்கு “பார்வையாளர் நாடு” என்னும் நிலை வழங்கியதற்காக இசுரயேல் ஐ.நா. தீர்மானத்தைக் கண்டனம் செய்தது. அப்பாஸ் வழங்கிய உரை இசுரயேலைப் பற்றிப் பொய்யும் புழுகும் கூறுகிறது என்று இசுரயேலி முதல்வர் பென்யமின் நெத்தன்யாகு தெரிவித்தார். இசுரயேலின் ஐ.நா. தூதர் ரான் ப்ரோசோர், “ஐ.நா.வின் தீர்மானம் ஒருதலைச் சார்பானது. அமைதிக்கான உரையாடலை வளர்த்தெடுக்க அது எவ்விதத்திலும் பயன்படாது. மாறாக பின்னோட்டத்தைத் தான் ஏற்படுத்துகிறது” என்று கூறினார்.
அவரது கருத்துப்படி, பாலத்தீனம் தனி நாடாக உருவெடுக்க ஒரே வழி இசுரயேலும் பாலத்தீனமும் “நேரடி கருத்துப் பரிமாற்றத்தில்” ஈடுபடுவதுதான்.
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் நிலைப்பாடு
பாலத்தீனத்துக்கு “பார்வையாளர் நாடு” நிலை வழங்கப்படுவதை எதிர்த்து வாக்களித்த முக்கிய நாடு, இசுரயேலைத் தவிர, ஐக்கிய அமெரிக்க நாடுகள் ஆகும்.
அமெரிக்கா நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹிலரி கிளிண்டன் பாலத்தீனத்துக்கு ஐ.நா. “பார்வையாளர் நாடு” நிலை வழங்கியது “துரதிருஷ்ட வசமானது, எதிர்விளைவை ஏற்படுத்தக்கூடியது” என்று குறிப்பிட்டார். மேலும் அவர் கூறியது: “இரண்டு இன மக்களுக்கு இரண்டு தனி நாடுகள் உருவாக வேண்டும். தனி இறையாண்மை கொண்டு தனித்தியங்கக் கூடிய பாலத்தீன நாடு உருவாக வேண்டும். அது இசுரயேல் என்னும் யூத குடியரசு நாட்டோடு அருகருகே அமைதி மற்றும் பாதுகாப்பு நிலவும் வகையில் செயல்பட வேண்டும். இதற்கு, சம்பந்தப்பட்ட தரப்பினர் நேரடி பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதே ஒரே வழி.”
பாலத்தீன மக்களின் நிலை மாறியதா?
ஐ.நா. பேரவை பாலத்தீனம் “பார்வையாளர் நாடு” என்று ஏற்றுக்கொண்டதால் பாலத்தீன நாட்டு மக்களின் அன்றாட வாழ்வில் பெரிய மாற்றம் ஏற்படப்போவதில்லை என்று பரவலாகக் கருதப்படுகிறது. பாலத்தீனத்தின் மேற்குக் கரையில் காசா பகுதியில் இசுரயேலின் ஆக்கிரமிப்பு தொடர்கிறது.
பாலத்தீனம் பற்றி ஐ.நா. நிறைவேற்றிய தீர்மானம் அந்நாடு முழு உறுப்பினர் நாடுகளைப் போல வாக்களிக்கும் உரிமையை பாலத்தீனத்திற்கு அளிக்கவில்லை. வெறுமனே பார்வையாளராக இருந்த நிலை மாறி இப்போது “பார்வையாளர் நாடு” (observer state) என்னும் நிலையைப் பாலத்தீனம் பெறுகிறது. எனவே பாலத்தீன இறையாண்மை சட்டமுறையாக அமைவதை ஐ.நா. ஏற்கிறது.
இந்த தீர்மானத்தின் இன்னொரு முக்கிய விளைவு, இனிமேல் பாலத்தீனம் பன்னாட்டு நிறுவனங்களில் “உறுப்பினர்” நிலை பெற முடியும். குறிப்பாக “பன்னாட்டு குற்றவியல் மன்றம்” (International Criminal Court – ICC). இவ்வாறு சேரும்போது இசுரயேல் பாலத்தீனர்கள் மீது தாக்குதல் நடத்தி குற்றம் புரிந்துள்ளது என்னும் வழக்கை நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்ல பாலத்தீனத்திற்கு உரிமை கிடைக்கும். தான் இவ்வாறு செய்யப்போவதாக பாலத்தீனம் இதுவரை கூறவில்லை என்றாலும், அவ்வாறு நிகழக் கூடும் என்பது இசுரயேலின் அச்சம்.
வாக்களிப்பு விவரம்
பாலத்தீனம் ஐ.நா. அவையில் “பார்வையாளர் நாடு” என்னும் நிலை அடைவதற்கு ஆதரவாக உறுப்பினர் நாடுகள் மிகப் பெரும் எண்ணிக்கையில் வாக்கு அளித்தன.
எதிர்ப்பு வாக்கு அளித்த நாடுகளுள் முக்கியமான நாடு ஐக்கிய அமெரிக்க நாடுகள். மேலும் இசுரயேல், கானடா, செக் குடியரசு தவிர மார்ஷல் தீவுகள், மைக்குரோனீசியா, நவுரு, பலாவு, பனாமா ஆகிய சிறு நாடுகள் உட்பட மொத்தம் 9 நாடுகள்.
பிரான்சு, இத்தாலி, எசுப்பானியா, நோர்வே, டேன்மார்க், சுவிட்சர்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகளும் கிரீசும் ஆதரவாக வாக்களித்தன.
செருமனியும் பிரிட்டனும் நடுநிலை வகித்தன. இசுரயேலோடு அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது பற்றி அப்பாஸ் வாக்குறுதி அளிக்கவில்லை என்பதை பிரிட்டன் காரணமாகக் காட்டியது.
முதலில் நடுநிலை வகித்த நாடுகள் பல, பின்னர் ஆதரவு அளித்து வாக்கு அளித்தன. இவற்றுள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் சில அடங்கும். 2012 நவம்பரின் தொடக்கத்தில் காசா பகுதியில் பாலத்தீனத்துக்கும் இசுரயேலுக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் 158 பாலத்தீனியரும் 8 இசுரயேலிகளும் உயிர் இழந்த பின்னணியில் பாலத்தீன முதல்வர் அப்பாசுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்பதும் இதற்குக் காரணம்.
ஐ.நா. அவையில் “பார்வையாளர் நாடு” என்னும் நிலை பெற வற்புறுத்த வேண்டாம் என்று கூறி, இசுரயேலும் ஐக்கிய அமெரிக்க நாடுகளும் பாலத்தீனத்தைக் கேட்டுக்கொண்டன. அவ்வாறு செய்தால் பெரிய நிதி இழப்பு ஏற்படும் என்றும் அச்சுறுத்தியிருந்தன. ஆனாலும், நிதி உதவியை நிறுத்திவிட்டால் முதல்வர் அப்பாஸ் சக்தி இழக்க நேரிட்டு அதனால் வேறு அரசியல் பின்னடைவு ஏற்படக்கூடும் என்று கருதி, அந்நாடுகள் தங்கள் அச்சுறுத்தலை வலியுறுத்தவில்லை.
இசுரயேலும் ஐக்கிய அமெரிக்க நாடுகளும் அதிருப்தி
பாலத்தீனம் ஐ.நா. அவையை அணுகி “பார்வையாளர் நாடு” நிலை பெற வற்புறுத்த வேண்டாம் என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கருத்தாக இருந்தது. தங்கள் கருத்தை அப்பாஸ் ஏற்கச் செய்வதற்காக அமெரிக்க அரசு வெளியுறவுத் துறை துணை அமைச்சராகிய பில் பர்ன்ஸ் (Bill Burns) என்பவரை அப்பாசிடம் அனுப்பியது. ஆனால் அப்பாஸ் அதற்குச் செவிமடுக்கவில்லை.
மேற்குக் கரையில் காசா பகுதியில் இசுரயேல் தனது குடியேற்றத்தை விரிவாக்கியதன் விளைவாக பாலத்தீனத்துக்கும் இசுரயேலுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை முறிந்தது. அந்தப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கும் பாலத்தீனம் முன்வர வேண்டும் என்பது ஐக்கிய அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் கோரிக்கையாக இருந்தது. மேலும், பாலத்தீனம் இசுரயேலுக்கு எதிராகப் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தை அணுகப் போவதில்லை என்று வெளிப்படையாக உறுதிமொழி அளிக்க வேண்டும் என்றும் அந்நாடுகள் நிபந்தனை விதித்தன.
இசுரயேல் அதிர்ச்சி அடைதல்
பாலத்தீனம் மிகப் பெரும்பான்மையான நாடுகளின் ஆதரவை ஐ.நா. பேரவையில் பெற்றது குறித்து இசுரயேல் அதிர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக, பிரிட்டன், செருமனி போன்ற நாடுகள் பாலத்தீனத்தின் விண்ணப்பத்தை எதிர்த்து வாக்களிக்கும் என்று இசுரயேல் எதிர்பார்த்தது. இறுதியில் பிரிட்டன் நடுநிலை வகித்தது.
இசுரயேலுக்கு எப்போதுமே முழு ஆதரவு அளித்துவந்துள்ள செருமனி நாடு, பாலத்தீனத்துக்கு எதிராக வாக்கு அளிக்கும் என்று இசுரயேல் எதிர்பார்த்தது. ஆனால், இறுதியில் செருமனி இஸ்ரயேலுக்கு ஆதரவாக வாக்கு அளிக்காமல், நடுநிலை வகித்தது இசுரயேலுக்குப் பெரும் அதிர்ச்சியாகி விட்டது. ஐரோப்பாவின் ஒரு நாடு மட்டுமே (செக் குடியரசு) பாலத்தீன விண்ணப்பத்தை எதிர்த்து, இசுரயேலின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக வாக்களித்தது.
இசுரயேலின் கோபம் உடனடியாக வெளிப்பட்டது. அந்நாட்டின் முதல்வர் நெத்தன்யாகு, ஐ.நா. முடிவைக் கேட்டவுடனேயே, பாலத்தீன மேற்குக் கரை காசாவில் இசுரயேலின் ஆக்கிரமிப்பைத் தீவிரமாக்கிச் செயல்பட ஆணையிட்டுள்ளார். ஆயிரக்கணக்கான இசுரயேலரை பாலத்தீன காசா பகுதியில் குடியேற்ற அவர் திட்டமிட்டு அறிவிப்பு வழங்கியுள்ளார். அது மட்டுமன்றி, கிழக்கு எருசலேம் பகுதியிலும் குடியேற்றத்தைத் தீவிரமாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஐ.நா.சபையில் இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிரான பாலஸ்தீன ஆதரவு தீர்மானம்
பாலஸ்தீன நிலப்பகுதியில் குடியிருப்புகளை அமைக்க இஸ்ரேலுக்கு தடை விதிக்கும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் 2016 திசம்பர் 24 அன்று நிறைவேறியது. பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேல் வலுக்கட்டாயமாக குடியிருப்புகளை அமைத்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் நடவடிக்கைகளை எதிர்த்து, எகிப்து ஒரு தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தாக்கல் செய்திருந்தது.
வாக்கெடுப்பு
இந்த தீர்மானத்தின் மீது 2016 திசம்பர் 24 அன்று வாக்கெடுப்பு நடைபெற்றது. ஓட்டெடுப்பில் 15 நாடுகளில் 14 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டது. இதனால் தீர்மானம் நிறைவேறியது. பாதுகாப்பு கவுன்சிலின் பிற உறுப்பு நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.
தீர்மானித்தின் விளைவுகள்
1967க்கு பிறகு பாலஸ்தீன நிலப்பரப்பில் இஸ்ரேல் ஏற்படுத்திய குடியிருப்புகள் சட்ட அங்கீகாரத்தை இழக்க உள்ளது. அதேபோல இனிமேல் புதிய குடியிருப்புகளை அமைக்க முடியாது.