துவாலு (Tuvalu,IPA: [t:u:’valu]), என்பது பசிபிக் கடலில் ஹவாய்க்கும் ஆஸ்திரேலியாவிற்கும் நடுவில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இது முன்னர் எலீஸ் தீவுகள் என அழைக்கப்பட்டது. இதன் அயல் நாடுகளாக கிரிபட்டி, சமோவா மற்றும் பீஜி ஆகியன அமைந்துள்ளன. துவாலுவில் மொத்தம் நான்கு தீவுகள் உள்ளன. மொத்தப் பரப்பளவு 26 சதுர கிமீ ஆகும். இதுவே வத்திக்கானை அடுத்து உலகின் இரண்டாவது மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட நாடாகும். ஐநா அவையில் உறுப்புரிமை கொண்ட மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட நாடு. உலகின் நான்காவது மிகச்சிறிய நாடு.
இந்நாட்டின் ஆதிமக்கள் பொலினேசியர்கள் ஆவார். 19ம் நூற்றாண்டின் இறுதியில் இத்தீவுகள் பிரித்தானியாவின் குடியேற்ற நாடாகியது. எலீஸ் தீவுகள் பிரித்தானியாவினால் 1892 முதல் 1916 வரை ஆளப்பட்டது. 1916இலிருந்து 1974 வரையில் இவை கில்பேர்ட் தீவுகளுடன் இணைந்து நிர்வகிக்கப்பட்டு வந்தது. 1974 இல் எலீஸ் தீவு மக்கள் தமது தீவை பிரித்தானிய ஆட்சிக்குட்பட்ட துவாலு என்ற தனித்தீவாக்க வாக்களித்தனர். இதன் படி 1978இல் இது பிரித்தானிய பொதுநலவாய நாடுகளின் கீழ் முழுமையான விடுதலை பெற்றது.