மு. க. ஸ்டாலின் | M. K. Stalin

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் (பிறப்பு: மார்ச் 1, 1953), (மு. க. ஸ்டாலின்) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சரும் ஆவார். இவர் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் மகன் ஆவார்.

இவர் தமிழகத்தின் துணை முதலமைச்சராகவும் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இவர் 29 மே 2009 முதல் மே 15, 2011 வரை பொறுப்பு வகித்துள்ளார். 1996 முதல் 2002 வரை சென்னை மாநகராட்சியின் 37வது மேயராகவும், 2009 முதல் 2011 வரை தமிழகத்தின் முதல் துணை முதல்வராகவும் பொறுப்பில் இருந்தார். ஆகஸ்ட் 28, 2018 முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக பொறுப்பில் உள்ளார்.

இந்தியன் எக்சுபிரசு நிறுவனத்தால் 2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிக சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில் மு. க. ஸ்டாலின் 30வதாக இடம் பெற்றார்.

வாழ்க்கைக் குறிப்பு

இவர் 1953 ஆம் ஆண்டு கருணாநிதி – தயாளு அம்மாள் ஆகியோரின் தம்பதிக்கு மூன்றாவது மகனாக சென்னையில் பிறந்தார். சோவியத் ஒன்றியத்தின் ஆட்சித் தலைவராக இருந்த ஜோசப் ஸ்டாலின் மறைந்த 4 நாட்களுக்குப் பிறகு பிறந்ததால் அவரது நினைவாக தம் மகனுக்கு ஸ்டாலின் எனப் பெயர் சூட்டினார் கருணாநிதி.

ஸ்டாலின் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். விவேகானந்தா கல்லூரியில் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய படிப்பை முடித்தார், 1973 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மாநிலக் கல்லூரியில் வரலாற்றுப் பட்டம் பெற்றார். ஆகஸ்ட் 1, 2009 அன்று அண்ணா பல்கலைக்கழகம் மு. க. ஸ்டாலினுக்கு கெளரவ முனைவர் பட்டம் வழங்கியது.

மு. க. ஸ்டாலின் ஆகஸ்ட் 25, 1975 இல் துர்கா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் என்ற மகனும் செந்தாமரை என்ற மகளும் உள்ளனர்.

பள்ளிப்பருவம்

ஸ்டாலின் சென்னை அண்ணா சாலையில் உள்ள சர்ச் பார்க் கான்வென்ட்டில் படிக்க விண்ணப்பித்தபொழுது அவரின் புரட்சிப் பெயரைக் கண்டு அவரை பள்ளியில் சேர்த்துக்கொள்ள பள்ளி நிருவாகம் மறுத்தது. இதனால் சென்னை சேத்துப்பட்டு கிறித்துவக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து மேல்நிலை வரை கல்வி பயின்றார்.

அரசியல் வாழ்க்கை

தந்தையின் அரசியல் பணிகள் காரணமாகவும், ஸ்டாலினுக்கும் இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் இருந்த காரணத்தாலும் திமுக உறுப்பினரானார். இவர் வசித்து வந்த கோபாலபுரம் பகுதியிலேயே இவர் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டார். 1967-1968 இடைப்பட்ட ஆண்டுகளில் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவராகப் படித்துக் கொண்டிருந்தபோது தன் நண்பர்களை இணைத்துக் கொண்டு கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பினை முடி திருத்தும் கடையில் ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். இவ்வமைப்பின் மூலம் அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்குப் பொதுப்பணிகளையும் சமூகப்பணிகளையம் செய்து வந்தார்.

மாநிலச் செயலாளர்

இதன்பின் படிப்படியாக இளைஞரணி அமைப்பு ரீதியாக 1980 இல் மதுரையிலே உள்ள சான்சிராணி பூங்காவிலே தொடங்கப்பட்டது . 1980 இல் திருச்சியிலே 2ம் ஆண்டு விழாவிலே 7 பேரை கொண்ட ஒரு அமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்புக் குழுவில் மு. க. ஸ்டாலின் ஒரு அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு முழுவதும் அந்த அமைப்புக்குழு சுற்றுப்பயணம் நடத்தி, மாவட்ட, ஒன்றிய, நகர அளவில் இளைஞரணிக்கென்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு ஊரிலும் இளைஞரணியைக் கட்டியமைத்தார். இதனால் அவருக்கு இளைஞரணி மாநிலச் செயலாளர் பொறுப்பு தரப்பட்டது.

சிறை செல்லல்

ஸ்டாலின் ஆரம்ப காலத்தில் பலமுறை கட்சிக்காக சிறைவாசம் அனுபவித்துள்ளார். 1975 இல் மிசா சட்டத்தின் கீழ் சிறையில் சென்றார் என்பதை எதிர்கட்சிகள் மறுத்துப் பேசுகின்றனர்.

இளைஞரணி தலைமையகம்

திமுக இளைஞரணி தலைமையகத்திற்காக அன்பகத்தை (முன்னாள் திமுக தலைமையகம்- தற்பொழுதுள்ள அண்ணா அறிவாலயத்திற்கு முன்) பெறுவதற்காக திமுக இளைஞரணிச் செயலாளராக இருந்த ஸ்டாலின் தமிழகம் முழுவதும், சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு 11 லட்ச ரூபாய் நிதி திரட்டினார்.

முதல் தேர்தல்

ஸ்டாலின் ஆரம்பத்திலிருந்தே சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில்தான் போட்டியிட்டு வருகிறார். இந்தத் தொகுதியை அண்ணா தி.மு.க கட்சியிடம் இருந்து பெற்றவர் ஸ்டாலின். நான்கு முறை இங்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1984 ஆம் ஆண்டு முதல் முறையாக இங்கு அவர் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் தோல்வியுற்றார் ஸ்டாலின்.

மேயர்

இளைஞர் அணியின் செயலாளராக தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் அவரை சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கான வாய்ப்பை அன்றைய முதல்வராக இருந்த மு.கருணாநிதி வழங்கினார். ஸ்டாலின் மேயராவதற்கு முன்பு வரை மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் வகையில் மேயர் பதவி இல்லை. (கவுன்சிலர்கள்) மாநகராட்சி உறுப்பினர்கள்தான் மேயரைத் தேர்ந்தெடுத்தனர்.

ஆனால் முதல் முறையாக 1996 ஆம் ஆண்டு, பஞ்சாயத்து ராஜ் சட்டம் திருத்தப்பட்ட பின்னர் நடந்த தேர்தலில் ஸ்டாலின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையைப் பெற்றார்.

2001 ஆம் ஆண்டு 2வது முறையாக அவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் 2002 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்தார். ஒரே நபர் இரு அரசுப் பதவிகளில் இருக்க முடியாது என்று அந்த சட்டத் திருத்தம் கூறியபடியால், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை வைத்துக் கொண்டு மேயர் பதவியிலிருந்து விலகினார் ஸ்டாலின்.

அமைச்சர்

மு.கருணாநிதி தலைமையில் சட்டமன்றத் தேர்தலில் திமுக அணி வெற்றி பெற்று மு.கருணாநிதி, ஐந்தாவது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்க, முதல் முறையாக மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் உள்ளாட்சித்துறை அமைச்சரானார்.

எதிர்க்கட்சித் தலைவர்

2016 சட்டமன்றத் தேர்தலின் போது, ​​ஸ்டாலின் இளைஞர்களைக் கவரும் விதமாக நமக்கு நாமே என்ற தலைப்பில் மாநிலம் தழுவிய சுற்றுப்பயணத்திற்கு சென்றார். அந்த தேர்தலில் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியை வென்றார் மற்றும் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். 2017 ஆம் ஆண்டில், ஸ்டாலின் மற்றொரு நமக்கு நாமே சுற்றுப்பயணத்திற்கு சென்றார். பின்னர் 2018 ஆம் ஆண்டில், அவரது தந்தை கருணாநிதி மறைவுக்கு பின், ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்றார்.

2019 பொதுத் தேர்தல் – மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி

மு. க. ஸ்டாலின் தேசிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கீழ் தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை உருவாக்கி, மாநிலத்தில் 2019 பொதுத் தேர்தலில் கூட்டணிக்கு தலைமை தாங்கினார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 40 நாடாளுமன்ற இடங்களில் 39 இடங்களையும், சட்டமன்ற இடைத்தேர்தலில் 21 இல் 12 இடங்களையும் 52% வாக்குகளைப் பெற்று வென்றது. திமுக தலைவராக பொறுப்பேற்ற பின்னர் இவர் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

முதலமைச்சர்

2021 சட்டமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக மு. க. ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். தேர்தல் முடிவுகளில் இக்கூட்டணி 159 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. இதையடுத்து மே 7ஆம் நாளன்று மு. க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

அரசியல் வளர்ச்சி

சாதாரண உறுப்பினராக சேர்ந்து களப்பணியாற்றி வட்டப் பிரதிநிதி, மாவட்ட பிரதிநிதி, பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர் என முறைப்படி தேர்வு பெற்று களப்பணிகள் வாயிலாக கட்சியின் பொறுப்பு படிக்கட்டுகளில் ஒவ்வொரு படியாக உயர்ந்து இளைஞர் அணிச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர், பொருளாளர் என்று உயர்ந்தார் மு.க. ஸ்டாலின்.

அரசியல் வாழ்க்கையில் எதிர்க்கட்சிகளைவிட, திமுகவுக்குள்ளேயே வைகோவை சமாளிக்க ஸ்டாலின் பெரும் பாடுபட்டார் என்று கருதப்படுகின்றது. வைகோவின் வளர்ச்சி மு.க. ஸ்டாலின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என ஆதரவாளர்களால் கருதப்பட்டது. ஒரு கட்டத்தில் வைகோ கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். வைகோவின் வெளியேற்றத்திற்குப் பின்னரே ஸ்டாலின், திமுகவில் வேகமாக வளர்ந்தார் என்று அரசியல் பார்வையாளர்களால் கருதப்படுகிறது.

2017 சனவரியில் திமுகவின் செயல் தலைவர் பதவி இவருக்கு வழங்கப்பட்டது. 2018-இல் திமுக தலைவர் மு. கருணாநிதியின் மறைவிற்குப் பின் ஸ்டாலின் திமுகவின் தலைவரானார். 2019-இல் இவரது மகன் உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞர் அணித் தலைவர் ஆனார்.

போட்டியிட்ட தேர்தல்கள்

தேர்தல்தொகுதிமுடிவுவாக்கு சதவீதம்எதிர்க்கட்சி வேட்பாளர்எதிர்க்கட்சிஎதிர்க்கட்சி வேட்பாளர் வாக்கு சதவீதம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984ஆயிரம் விளக்குதோல்வி47.94கே. ஏ. கிருஷ்ணசாமிஅதிமுக50.44
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989ஆயிரம் விளக்குவெற்றி50.59தம்பிதுரைஅதிமுக(ஜெயலலிதா அணி)30.05
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991ஆயிரம் விளக்குதோல்வி39.19கே. ஏ. கிருஷ்ணசாமிஅதிமுக56.5
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996ஆயிரம் விளக்குவெற்றி69.72ஜீநாத் ஷெரிப்டீன்அதிமுக22.95
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001ஆயிரம் விளக்குவெற்றி51.41எஸ். சங்கர்தமாகா43.78
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006ஆயிரம் விளக்குவெற்றி46ராஜாராம்அதிமுக43.72
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011கொளத்தூர்வெற்றி47.7சைதை துரைசாமிஅதிமுக45.78
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016கொளத்தூர்வெற்றி54.3ஜே. சி. டி. பிரபாகர்அதிமுக31.8
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021கொளத்தூர்வெற்றி60.86ஆதிராஜாராம்அதிமுக20.27

பொழுதுபோக்கு

ஸ்டாலின் துடுப்பாட்டம், கணினி விளையாட்டு, பூப்பந்தாட்டம், சதுரங்கம், கேரம் உள்ளிட்டவற்றிலும் ஆர்வம் கொண்டவர்.

வெளி இணைப்புகள்

மு. க. ஸ்டாலின் – தமிழ் விக்கிப்பீடியா

M. K. Stalin – Wikipedia

About the author

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *