புரசு (butea monosperma) என்பது பலாச (butea) வகையைச் சேர்ந்த ஒரு மரமாகும். இதற்கு பலாசு, பொரசு, புரசை, என்ற வேறு பெயர்கள் உண்டு. இது ஒன்பதாம் நூற்றாண்டுவரை பலாசம் என்றே அழைக்கப்பட்டது. இது பகட்டான செம்மஞ்சள் நிறப் பூங்கொத்தினையும் தட்டையான விதைகளையும் உடையது. இது இலையுதிர் காடுகளில் தானாக வளரும் மரமாகும். அழகுக்காகத் தோட்டங்களிலும் வளர்க்கப்படுகிறது. இதன் பூ, விதை, பட்டை, பிசின் ஆகியவை மருத்துவப்பயன் உடையவை. திருத்தலைச்சங்காடு, திருக்கஞ்சனூர் ஆகிய சிவத் தலங்களில் புரசு (பலாசம்) தலமரமாக உள்ளது. இதனை கிழிமூக்கு பூ என்றும் அழைப்பார்கள். இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான சார்க்கண்ட்டின் மாநில மலராக இப்பூ விளங்குகிறது.
பயன்கள்
பலாசத்தின் மற்றொரு முக்கியப் பயன் இதைத் தாக்கும் அரக்குப் பூச்சியான கெர்ரியா லக்காவால் உண்டாகிறது. இந்த பூச்சி மரத்தின் தண்டுப் பகுதியில் வளர்ந்து அரக்கை உண்டாக்குகிறது. ஷெல்லாக் எனப்படும் இந்த அரக்கில் மணமுள்ள பிசின், நிறப் பொருளில் மெழுகு, புரதங்கள், கனிம உப்புகள், மணப் பொருட்கள் போன்றவை காணப்படுகின்றன. இந்த மெழுகை ஆப்பிள், ஆரஞ்சு பழங்களின்மேல் பூசப்படுவதால், அவற்றின் சேமிப்புக் காலம் அதிகரிக்கப்படுகிறது. அரக்கு உற்பத்திக்காகவே இந்தியாவின் மத்திய மாநிலங்களில் இந்தத் தாவரம் அதிகமாக வளர்க்கப்படுகிறது.