சீமைக் கருவேலம் என்றும், வேலிக்காத்தான் என்றும் பரவலாக அறியப்படும் இது வேளாண் நிலங்களையும், பிற வாழ்வாதாரங்களையும் நாசப்படுத்தக்கூடிய ஒரு கொடியத் தாவரமாகும்.[சான்று தேவை] இதன் அறிவியல் பெயர் ப்ரோசோபிச் சூலிஃப்லோரா Prosopis juliflora என்பதாகும். இதை எசுப்பானிய மொழியில் bayahonda blanca எனக் கூறுவர். மெக்சிகோ, கரிபியன் தீவுகள் மற்றும் தென் அமெரிக்கா போன்றவற்றை தாயகமாகக் கொண்டவை.
நச்சுக்களை
பயிர்களுக்கு வேலியாகவும், சமையலுக்கு விறகாகவும் பயன்படும் என்ற நம்பிக்கையில், 1950களில் ஆசுத்திரேலியாவில் இருந்து சிறிதளவு விதையாக இது இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது.[சான்று தேவை] இந்த அறுபது ஆண்டுகளில் வளர்ந்து பெருகிப் பரவி இன்று தமிழகம் முழுவதையுமே ஆக்கிரமித்து விட்டது. இந்த முள்மரம், அமெரிக்கா போன்ற பல வளர்ந்த நாடுகளில் வேளாண்மைக்கு எதிரான ஆபத்தான நச்சுத் தாவரமாக அறிவிக்கப்பட்டு வேளாண் கண்காட்சியில் மட்டும் வைக்கப்பட்டு வருகிறது.
கேரளாவில் இவை வேறோடு பிடுங்கியெறியப்பட்டு இவை வளரா வண்ணம் பாதுகாக்கப்படுகிறது.[சான்று தேவை] தமிழகத்தில், இவை விளை நிலங்களில் 25 விழுக்காட்டிற்கு மேல் வளர்ந்து வேளாண்மையே தொடரா வண்ணம் நிலத்தைப் பாழ்படுத்தியிருக்கிறது. இதனைக் களைய பல அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றன.குறிப்பாக சீமை கருவேலமரம் ஒழிப்பு இயக்கம் எனும் மக்கள் அமைப்பு தீவிரமாக இம்மரங்களை வேரோடு அகற்றிவருகிறது. தமிழக அரசிடம் இம்மரங்களை தடை செய்யக்கோரியும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன.
வடிவமைப்பு
மரம் 12 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இது புளியமர இலைகளைப் போல் சிறு இலைகளையும், கருவேலமரத்தை ஒத்தும் காணப்படுகின்றன. இவைகள் மஞ்சள் நிற நீண்ட பூக்களையும், முதிர்ச்சியில் மஞ்சளாக மாறிவிடும் பச்சை நிறக்காய்களையும் கொண்டது. இதன் வேர், நிலத்தில் ஆழச்சென்று நிலத்தடி நீரையும் உறிஞ்சக்கூடியது. இதன் வேர் (53 மீட்டர்) 175 அடி நீளம் வளரக்கூடியதென பதிவிடப்பட்டுள்ளது. இதன் தண்டுப்பகுதிகளில் திரவ ஒழுக்கு காணப்படும்.
தன்மை
எந்த வறட்சியிலும் வளரக்கூடிய தன்மை சீமைக் கருவேல மரங்களுக்கு உண்டு. மழை இல்லாமல் போனாலும் நிலத்தடி நீரை உறிஞ்சி, தனது இலைகளை வாடவிடாமல் பார்த்துக்கொள்கிறது. இவை ஆழ வேர் மட்டுமில்லாமல் உறுதியானப் பக்கவேர்களையும் கொண்டு வளர்வதால் இவை மழைநீரை உறிஞ்சி நிலத்தடிக்குச் செல்வதை தடைசெய்கிறது. எந்த நோயினாலும் பூச்சிகளாலும் தாக்க முடியாத, எந்த இடத்திலும் மற்ற தாவரங்களை அழித்துவிட்டு தான் மட்டும் செழித்துப் படருகின்ற தன்மை வேலிக்காத்தானுக்கு மட்டுமே உண்டு. இவை வாழும் இடத்தில் உற்பத்தி செய்யும் நச்சுப்பொருளால் நிலத்தில் பிற செடிகள் வளர்வதை அறவே தடுக்கிறது.
மாற்றுப் பெயர்கள்
தமிழ் நாட்டில் காட்டுக்கருவேல் மரம், சீமை உடை, சீமைக்கருவை, வேளிக்கருவை, டெல்லி முள், முட்செடி என அழைக்கப்படுகின்றது. தமிழ் நாட்டில் இயற்கையாக வளரும் கருவேலமரத்தையும் (Acacia nilotica) ஒத்து இருப்பதால் இவை கருவமரம் என அழைக்கப்படுதலும் உண்டு. ஆனால் அடிப்படையில் இவை இரண்டும் வெவ்வேறு மரங்களாகும்.
பாதிப்புகள் மற்றும் அழிப்பு நடவடிக்கைகள்
வறட்சி காலங்களில் நிலத்தடி நீரை இம்மரம் உறிஞ்சிவிடுவதால் மற்ற தாவரங்களுக்கு போதிய நீர் கிடைப்பதில்லை. இவை நிலத்தில் பிற செடிகள் வளர்ப்பைத் தடுக்கிறது. நிழல் மரமாகவோ, கனி மரமாகவோ, கதவு சன்னல் என்று பயன்பாட்டிற்குரிய பொருள்களைச் செய்வதற்கோ எவ்வளவு பசுமையான தழையாக இருந்தாலும் அடியுரமாக இடுவதற்கோ, குறைந்தபட்சம் பறவைகள் அமர்ந்து கூடு கட்டுவதற்குக்கூட வேலிக்காத்தான் பயன்படுவதில்லை. இவைகளால் ஏற்படும் பாதிப்பு அளவிட முடியாதது.
பல்லாயிரம் பறவைகளின் சரணாலயமாகத் திகழும் வேடந்தாங்கல் ஏரியில் செழித்து வளர்ந்த வேலிக்காத்தான், பருவ காலத்திற்கு வந்து அந்த ஏரியில் நீந்த முனைந்த வெளிநாட்டுப் பறவைகளையெல்லாம் குத்திக் கிழித்துக் கொன்று, பின்பு வனத்துறையின் முயற்சியால் அந்த மரங்கள் பிடுங்கி எறியப்பட்டுள்ளன. அதன் முள் குத்தி இறந்துபோன விவசாயிகளும் நிறையபேர் உண்டு.[சான்று தேவை] தாவரம் முழுமையுமே நஞ்சாக உள்ளது.
தீமையின் பட்டியல்கள்
இதைப்போல் இதன் பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கின்றன. இறுதியில் விளைநிலங்கள் பாலைவனங்கள் ஆகின்றன.
அழிக்கும்முறை
சீமை கருவேலமரம் ஒழிப்பு இயக்கம் எனும் மக்கள் அமைப்பு இயந்திரங்களைக் கொண்டு இம்மரங்களை வேரோடு பிடுங்கி அழித்துவருகிறது. ஆசிட் அல்லது வேறுவகையான முயற்சிகள் மன்வளத்தை கெடுக்கும் என்பது சீமை கருவேலமரம் ஒழிப்பு இயக்கத்தினரின் கருத்து. மேலும், பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் இடத்தில் மீண்டும் நல்ல மரங்களை நட்டு வளர்ப்பதன் மூலமாக மீண்டும் சீமை கருவேலமரங்கள் முளைத்துவிடாமல் அழிக்கப்படுகிறது. இந்த மரங்களை அழித்தாலும் மீண்டும் முளைத்துவிடுகிறது என்று பொதுவான கருத்து மக்களிடையே நிகழ்கிறது. ஆனால் இந்த மனநிலை முற்றிலும் தவறு. முறையாக அகற்றினால் இம்மரங்கள் வளர்வதை தவிர்க்கலாம். இயக்கத்தின் இணையதளம்: www.aaproject.org; www.facebook.com/karuvelamaram இயக்கத்தின் தொடர்பு மின்னஞ்சல்: aaproject.tn@gmail.com
சீமை கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்
சீமைக் கருவேலமரம் ஒழிப்பு இயக்கமானது 16/08/2013ம் தேதியில் தொடங்கப்பட்டது. [சான்று தேவை] இந்த இயக்கத்தை தோற்றுவித்து மக்களை ஒருங்கிணைப்பவர் ஏனாதி அ.பூங்கதிர்வேல் ஆவார்.[சான்று தேவை] இந்த இயக்கமானது சீமை கருவேலமரங்களினால் ஏற்படும் தீமைகளை விழிப்புணர்வு முகாம்களின் மூலமாக எடுத்துரைத்து மக்களோடு இணைந்து கிராமபுறங்களில் அழித்துவருகிறது. இந்த இயக்கத்தில் தன்னார்வ உறுப்பினர்கள் இருப்பினும், மாவட்டந்தோறும் முழுநேர பணியாளர்களை ஊதிய அடிப்படையில் அமர்த்தியுள்ளது. அவர்களுக்கு சீமை கருவேலமரங்களின் தீமைகளை மக்களுக்கு எடுத்துரைப்பதே பணியாக கொடுக்கப்படுகிறது. இவ்வியக்கத்தில், மாற்று விவசாயம் மற்றும் தொழில் திட்டம் , பனை வளர்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம் ,வர்த்தக பிரிவு என பல்வேறு திட்டங்கள் அமலில் உள்ளது.
இதுவரை 400 க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் மற்றும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளைநிலங்கள், அரசு புறம்போக்கு இடங்கள் சீரமைக்கப்பட்டுள்ளது. இச்சீரமைப்பிற்கு இயற்கை வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் மாவேள் உணவு மற்றும் இயற்கை வேளாண்மை நிறுவனம் நிதி உதவி செய்கிறது. சீரமைக்கப்படும் இடத்தில் மீண்டும் வளராமலிருக்க உடனடியாக குத்தகை முறையில் வேளாண்மை செய்வதும் , நல்ல மரங்களை நட்டுக்கொடுப்பதையும் தலையாய பணியாக கொண்டுள்ளது. தமிழகத்தில் இளைஞர்கள் இவ்வியக்கத்தை முழுமையாக ஆதரித்து செயல்படுத்த உதவிவருகின்றனர்.
மாற்றுவழி
இதன் விறகுகள் அதிக ஆற்றல் கொண்டவை என அறியப்பட்டுள்ளது. இவைகள் மின்சார உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இவை வளர்க்க வேண்டிய இடம் பாலைவனம், விளைநிலமல்ல.[சான்று தேவை]
போராட்டங்கள்
திருச்செங்கோடு வட்டம், உஞ்சனை கிராமத்தில் சுமார் 90 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரியை நம்பி சுமார் 100 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. ஆனால், கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஏரி கவனிப்பாரின்றி சீமைக் கருவேலம் மரங்கள் சூழ்ந்து காணப்படுவதால், நிலத்தடி நீரை வெகுவாக உறிஞ்சக்கூடிய இந்த சீமைக் கருவேலம் மரங்களால் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள விவசாயக் கிணறுகள் நீரின்றி வறண்டு விட்டதாக அந்தக் கிராம மக்கள் போராடியுள்ளனர்.
சீமை கருவேலமரம் ஒழிப்பு இயக்கம் இந்த தாவரத்தை தடை செய்யக் கோரியும் உடனடியாக அகற்றக் கோரியும் மாநில அளவில் ஆர்பாட்டங்கள் , உண்ணாவிரதங்கள் , கோரிக்கை மனு அளித்தல் , உறுப்பினர்களைக் கொண்டு முதலமைச்சர் கவனத்திற்கு அஞ்சல் அனுப்பும் போராட்டம் என பல்வேறு போராட்டங்களை செய்துள்ளது. மேலும் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், மதுரை சம உரிமை அமைப்பு சார்பில், வைகை ஆறு, மதுரை கண்மாய்கள் மற்றும் தமிழக நீர்நிலைகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற, அரசுக்கு உத்தரவிட வேண்டி உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, நீதிபதிகள் இந்த மரங்களை அகற்ற உத்தரவிட்டனர். இவை நிலத்தில் நீரில்லாத போது, காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சுகின்றன,மேலும் கரியமில வாயுவை அதிக அளவில் வெளியிடுவதாலும் வளிமண்டலம் மாசுபடுகிறது. எனினும் தமிழக அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றுகூறி நீதியரசர்கள் தமிழக சட்டமன்றத்தில் கருவேலமர அழிப்பு சட்டத்தை இரு மாதங்களுக்குள் இயற்ற உத்தரவிட்டனர்.