வில்வம் அல்லது வில்வை அல்லது குசாபி அல்லது கூவிளம் (Bael, Aegle marmelos) இலங்கை, இந்தியா மற்றும் அயனமண்டலத்தை சேர்ந்த ஆசிய நாடுகளில் காணப்படும் ஒரு தாவரமாகும். சைவ சமய மரபுகளில் வில்வ மரத்திற்கு முக்கிய பங்கு உண்டு.
கூவிளம்
கூவிளம் என்னும் சொல் வில்வ மரத்தைக் குறிக்கும். சங்ககால மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் கூவிளம் என்பதும் காட்டப்பட்டுள்ளது.
பயன்கள்
பழத்தின் உள்ளீடு நேரடியாக உண்ணப்படுவதுடன் உலரச் செய்யப்பட்டும், உணவு வகைகளுக்குப் பெறுமதி கூட்டப்படுவதன் மூலமும் உள்ளெடுக்கப்படுகிறது. இளம் இலையும் அரும்பும் சலாது தயாரிப்பதில் உபயோகப்படுகிறது.
தமிழில் ‘கூவிளம்’ , ‘இளகம்’ எனப்பல பெயர்களில் வழங்கப்படும் இது தமிழ் சித்த மருத்துவத்தில் பல்வேறு பயன்களைக் கொண்டது. மூக்கடைப்பு, செரியாமை, காசம் முதலான நோய்களுக்கு இதன் இலை, பழம் என்பன மருந்தாகப் பயன்படுகிறது. வில்வ வேர் சித்தமருத்துவத்தில் கூறப்பட்டுள்ள பெரும்பஞ்ச மூலங்களுள் ஒன்றாகும்.
ஆன்மீகப் பயன்கள்
இந்து மதத்தில் வில்வ மரம் மிகப் புனிதமானது.சிவ வழிபாட்டில் வில்வ பத்திர பூசை முக்கியமானது. முக்கூறுகளைக் கொண்ட வில்வ இலை திரிசூலத்தின் குறியீடாகக் கொள்ளப்படுகிறது. இது இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியா சக்தி என்பதைக் குறிக்கின்றது. நேபாளத்தில் கன்னிப் பெண்களின் கருவளத்தைக் காக்கவேண்டி வில்வம் பழத்திற்கு திருமணம் செய்து வைக்கும் சடங்கு பிரபலமானது.