தூக்கணாங்குருவி (baya weaver, உயிரியல் பெயர்: Ploceus philippinus) என்பது இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்காசியாவில் பரவலாகக் காணப்படும் ஒரு பறவை ஆகும். தங்கள் உள்ளுணர்வின் உந்துதலால் சிறப்பான கூடுகளைக் கட்டும் பறவைகளுள் முக்கியமான ஒன்று. பயிர்களின் இலைநரம்புகள் நார்கள் இவற்றைக் கொண்டு இக்குருவி பின்னும் தொங்கு கூடுகள் வியப்பை அளிப்பன.
பொது இயல்புகள்
இது ஊர்க்குருவி வமிசத்தைச் சேர்ந்த ஒரு பறவை. அளவிலும் உடலமைப்பிலும் இது ஊர்க்குருவியை ஒத்திருக்கும். ஆனால் இதன் மேல் தலை, மார்பு ஆகியன மஞ்சளாக இருக்கும். வயல்வெளி போன்ற இடங்களில் இது திரள்களாகக் கூடி வாழும்.முட்டையிடும் காலங்களில் இது மஞ்சள், கருப்பு நிறங்களைப் பெற்றிருக்கும். கூடு கட்டிக் குஞ்சு பொரிக்காதபோது நீர் ஆதாரங்களுள்ள அடைவிடங்களில் கூடி இவை இரவைக் கழிக்கும்.
வசிப்பிடம்
கோடையில் ஓர் கிணற்றருகில் அல்லது குளக்கரையிலுள்ள ஈச்சமரம் ,கருவேலமரம், இலந்தை மரம், பனை மரம் மற்றும் மின் கம்பிகளிலும் இவை கூடு கட்டும். கூடுகள் நார்களால் பின்னிய தடிப்பக்கங்களுடன் சுரைக்காய் போன்ற வடிவம் கொண்டிருக்கும். கிளைகளிலிருந்து தொங்கும் இக்கூடுகளில் வளைகளுள் தளங்கட்டி அதில் முட்டையிடும்; இத்தளங்களின் பக்கங்களில் இக்குருவி களிமண் கட்டிகளை அப்பி அதில் மின்மினி பூச்சியினை ஒட்டி வைத்து கூட்டினை அழகு படுத்தும்.
வேறு பெயர்கள்
இவை பொதுவாக கின்னகம், சிதகம், தூதுணம், மஞ்சட்குருவி, மஞ்சட்சீட்டு யெனவும் கூறப்படும். ஆங்கிலதில் பயா வீவர் (Baya Weaver), அல்லது வீவர் பறவை (Weaver Bird) எனக் கூறப்படுகிறது.
உடல் அமைப்பு
தூக்கணாங்குருவி பொதுவாக 15 சென்டிமீட்டர் வரை வளரக்கூடியது. ஆண் மற்றும் பெண் இரு பாலினமும் கூடு கட்டக்கூடியது. வால் பகுதி சிறியதகவும் மேல் பகுதி தடித்து காணப்படும்.
தூக்கனாங்ககுருவி இரு வகைகளாக காணப்படும். ஒரு வகைக் குருவிகளின் மேல் பகுதி அடர் பழுப்பு நிறத்தைக் கொண்டிருக்கும். கீழ்ப் பகுதி வெண்மை மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்படும். மற்றொரு வகைக் குருவிகள் பழுப்புடன் கூடிய வெண்மைக் கோடுகளை கொண்டிருக்கும்.
சராசரியாக 20 கிராம் எடை கொண்டது.
உணவுப் பழக்கம்
இவை புல், அரிசி, கோதுமை, சோளம், தினை ஆகிய தானிய வகைகளை உட்கொள்ளூம்.
வெட்டுக்கிளி, ஈக்கள், கரையான், வண்டுகள், கம்பளிப்பூச்சி, பட்டாம்பூச்சி, சிலந்தி, சிறிய நத்தைகள், அரிசி தவளைகள் ஆகியவற்றை உணவாக உட்கொள்ளூம்.
தமிழ் இலக்கியைங்களில் தூக்கணாங்குருவி
தினைப்புனம் காத்த மகளிர் இவற்றைத் தான் ஓட்டியதாகப் பாடல்கள் கூறுகின்றன.
சிறப்புகள்
இவ்வளவு சிறப்புமிக்க தூக்கணாங்குருவி தன் ஆண் துணை இறந்து விட்டால் அதுவும் இறந்துவிடும்.