குள்ளத்தாரா (Cotton Pygmy Goose or Cotton Teal, Nettapus coromandelianus) என்பது சிறிய உடல் அமைப்பு கொண்ட ‘மரத்தில்-அமரும்’ வாத்து இனமாகும்.
உருவமைப்பு
மிகவும் சிறியதாக இருக்கும் இவ்வகை வாத்துக்கள் தான் உலகிலேயே மிகச்சிறிய நீர்பறவைகள் எனலாம். இவை 26 செ.மீ. நீளமும் மற்றும் 160 கிராம்கள் உள்ளன. இவற்றின் உடலில் பெரும்பாண்மையாக வெண்மையே இருக்கும். அலகு குட்டையாகவும், கூஸ் (goose) பறவைபோல் ஆரம்பத்தில் அகலமாகவும் இருக்கும். கோள வடிவ தலையும் குட்டையான கால்களும் உள்ளன.
ஆண் குள்ளத்தாரா
இனவிருத்திக்கால ஆண்கள் பளபளக்கும் கரும்பச்சை தலைப்பாகையுடனும், வெள்ளை முகம், கழுத்து மற்றும் உடலின் அடிப்பகுதிகளும் உள்ளன. இதுபோல் கருப்பு கழுத்துப்பட்டையும், வெண்மையான இறக்கை பட்டையும் உள்ளது. பறக்கும் வேளைகளில் இறகுகள் பச்சையும், வெள்ளை பட்டையும் தெரியும்.
பெண் குள்ளத்தாரா
பெண்கள் நிறம் குன்றி, கருப்பு வளையம் இல்லாதிருக்க, இவைகட்கு வெள்ளை நிற சிறகு கோடும் இருக்காது. இனவிருத்தி செய்யா காலங்களில் ஆணும் பெண் போன்று தோற்றமளித்தாலும், வெள்ளை நிற சிறகின் அடையாளம் மட்டும் பாலினங்களை பிரித்துக்காட்டும்.
பரம்பல்
இவை பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், தென்கிழக்கு ஆசியா, தெற்கு மற்றும் வடக்கு ஆஸ்திரேலியாவில் இனவிருத்தி செய்கின்றன. பெரும்பாலாக வலசை செல்லாமல் தங்கியிருக்கும் இனமான இவை மழைக்காலங்களில் மட்டும் தெற்கு நோக்கி வேறிடம் செல்லும் வாய்ப்புள்ளது.
குணாதிசயங்கள்
இவை கூட்டமாகவோ துணைகளாகவோ நன்னீர் ஏரிகள், மழைநீர் தேங்கும் குட்டைகள், நீர் நிறைந்த நெல் வயல்கள், பெரியளவில் தண்ணீர் தேங்கிய தொட்டிகள் போன்ற இடங்களில் வாழும். இவை ஒருவகையாக கொக்கரிப்பது போல் பறக்கும் வேளையில் ஒலியெழுப்புகின்றன.
உணவு
இவை பெரும்பாலும் விதைகள், தாவிர பகுதிகள், அல்லி மலர்களின் தண்டுகள் உண்பதோடு பூச்சிகளும், ஓட்டுடைய முதுகெலும்பில்லா பிராணிகளையும் உண்ணும்[சான்று தேவை].
இனவிருத்தி
குள்ளத்தாராக்களுக்கு புணரும் காலம் சூலை முதல் செப்டம்பர் வரை[சான்று தேவை].
கூடு
இவை தன் கூடுகளை நீர்நிலைகளருகே இயற்கையாக அமைந்திருக்கும் மரப்பொந்துகளில் அமைக்கும். சில சமயம் அவை புற்கள், குப்பை மற்றும் இறகுகளால் அலங்கரிக்கும்[சான்று தேவை].
முட்டை
8 முதல் 15 முட்டைகளை தந்த வெண்மை நிறத்தில் இடும்[சான்று தேவை].
மனிதருடன் பரிமாற்றங்கள்
அவைகளை சீண்டாதிருந்தால் மனித நடமாட்டத்தினை கண்டுகொள்ளமலிருக்கும். ஆனாலும் சற்று எச்சரிக்கையோடிருக்கும் இவை தன் பறக்கும் தன்மையில் நம்பிக்கைக்கொண்டு, ஆபத்துணரும் வேளைகளில் பறந்து விடும். தேவையேற்பட்டால் நீரினுள் மூழ்கவும் செய்கின்றன