பெருநாரை (Greater Adjutant, Leptoptilos dubius) என்பது பெயருக்கு ஏற்றபடியே நாரைக் குடும்பத்தைச் சேர்ந்த பெரிய பறவையாகும். இவை ஒரு காலத்தில் தெற்காசியா முழுவதும் (குறிப்பாக இந்தியாவில்) பரவலாக காணப்பட்டன. ஆனால், தற்போது இந்தியாவின் கிழக்கிலிருந்து போர்னியோ வரை காணப்படுகின்றன. இவை இந்தியாவில் குறிப்பிடும்படியாக அசாத்தில் காணப்படுகின்றன. இவற்றின் அலகுகள் மஞ்சள் நிறத்தில் ஆப்புப் போன்ற நான்குபக்க வடிவில் இருக்கும். இதன் நெஞ்சில் ஒரு தனித்துவமான செந்நிறப் பை தனித்த அடையாளமாக உள்ளது. இந்தப் பை மூச்சுடன் சம்பந்தப்பட்ட காற்றுப்பையாகும். இவை சிலசமயம் இறந்த விலங்குகளை உண்ணும் கழுகுகளுடன் இணைந்து உணவு உண்ணும். இவை தரையில் நடக்கும் போது சிப்பாய் போல மிடுக்குடன் நடக்கும்.
விளக்கம்
இப்பறவைகள் 145-150 செ. மீ. (57-60 அங்குலம்) உயரம் உள்ளவை. சராசரி நீளம் 136 செ.மீ (54 அங்குலம்) ஆகும். இறகு விரிந்த நிலையில் 250 செ. மீ. (99 அங்குலம்) அகலம் இருக்கும். சிவப்பு நிறமுள்ள கழுத்தும் முடிகளற்ற, செந்நிறத் தலையும் கொண்ட இவற்றின் மேற்புறம் அழுக்குக் கருப்பு நிறத்திலும் கீழ்புறம் அழுக்கு வெள்ளை நிறத்திலும் இருக்கும். இதனுடைய கூடுகளை உயர்ந்த பாறை இடுக்குகளிலோ உயர்ந்த மரங்களின் மீதோ கட்டும்.