சுண்டங்கோழி (Red Spurfowl), இந்திய நாட்டின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் ஒளிந்து வாழும் பறவையாகும். இதன் குடும்பப்பெயர் பாசின்டேசு (Phasianidae) என்று அறியப்படுகிறது. இப்பறவை உடல் அளவில் சிறியதாகவும் யாருக்கும் தெரியாமல் புதர்களுக்குள் மறைந்து வாழும் குணம் கொண்டுள்ளது. இவற்றின் உடல் சிகப்பு நிறத்துடன், வால்பகுதி நீட்டமாகவும் காணப்படுகிறது. இவற்றின் கண்களைச்சுற்றி சிவப்பு வண்ணம் பூசியதுபோல் தோல் தோர்த்திக் காணப்படுகிறது. இவற்றில் ஆண், பெண் இரண்டிற்குமே இவற்றின் பெயருக்கு ஏற்றாப்போல் கால்பகுதியில் ஆணி போன்ற அமைப்புடன் கூர்மையான நகம் காணப்படுகிறது.
இப்பறவை அமைதியாக புதர்களுக்குள் மறைந்திருந்தாலும் காலை, மாலை சத்தமாக ஒலி கொடுக்கும் குணம் கொண்டுள்ளது. இவற்றிற்கு மற்ற பறவையைப்போல் சிறகுகள் இருந்தாலும் குறைந்த தூரமே பறக்கும் சக்திகொண்டது. இதன் காரணமாக ஆண்டு முழுவதுமே ஒரே பிரதேசங்களில் மட்டுமே வாழுகிறது.
மழைக்காலத்திற்கு முன்னர் சனவரி முதல் சூன் மாதத்திற்குள் இனப்பெருக்கம் செய்கிறது. இனப்பெருக்கத்தின் போது மூன்று முதல் ஐந்து முட்டைகள் வரை இடுகிறது. ஆண் பறவை இனப்பெருக்கத்திற்கு மட்டுமே உடனிருக்கும். பெண் பறவை மட்டுமே அடைகாத்து குஞ்சுகளை வளர்க்கிறது.