இலங்கை தவளைவாயன் (Sri Lanka frogmouth) என்பது ஒரு சிறிய தவளைவாயன் பறவை இனம் ஆகும். இவை தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையிலும், இலங்கையிலும் காணப்படுகின்றன. இவை பக்கிகளுடன் தொடர்புடைய பறவைகள் ஆகும். காடுகளில் காணப்படும் இரவாடியான இதன் உடல் நிறமானது இலைச் சருகுகளை ஒத்திருக்கிறது. இந்த பறவைகள் அமைதியாக மரக் கிளைகளின் மீது அமர்ந்திருக்கும்போது உருமறைப்பால் பார்வையில் படுவது கடினமாகும். இவை மரத்தில் தங்களுக்கு பிடித்த ஒரு இடத்தில் தங்குகின்றன. அதற்கு தொந்தரவு நேராதவரை தொடர்ந்து அதே இடத்தைப் பயன்படுத்துகிறன்றன. இவை ஒரு விசித்திரமான ஒலியை எழுப்புகின்றன. பொதுவாக விடியலிலும், அந்தியிலும் ஒலியை எழுப்புகின்றன. இவற்றின் உடலில் உள்ள நிறத் திட்டுகளானது பாலினங்களுக்கு ஏற்ப சற்று வேறுபடுகின்றது.
விளக்கம்
இந்த பறவையானது 23 சென்டிமீட்டர்கள் (9.1 in) நீளம் வரை வளர்கின்றது. பிற தவளைவாயன்களைப் போலவே, இந்த இனப் பறவையும் அகலமான தடையுள்ள அலகுடன் கூடிய பெரிய தலையும் அதில் முன்னோக்கி காணப்படும் கண்களையும் கொண்டு பரந்த இருநோக்கி பார்வையைக் கொண்டுள்ளது . இந்த இனத்தைச் சேர்ந்த மற்ற பறவைகளுடன் ஒப்பிடுகையில், இது சிறிய இறக்கைகளைக் கொண்டுள்ளது.
வாழ்விடமும், பரவலும்
இந்த இனம் தென்மேற்கு இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளிலும், இலங்கையிலும் காணப்படுகிறது. இதன் வாழ்விடம் வெப்பமண்டல காடுகள் ஆகும். இவை பொதுவாக அடர்த்தியான மரங்களை வாழிடமாகக் கொண்டவை. இவை சில நேரங்களில் பெருந்தோட்டங்கள் உட்பட மிகவும் தொந்தரவான வாழ்விடங்களிலும் காணப்படலாம். உருமறைப்பு மற்றும் இரவாடுதல் பழக்கத்தின் காரணமாக இவை இருப்பது பார்வையில் படாமல் போகலாம்.
நடத்தை
இந்த தவளைவாயனானது, பகல்நேரங்களில் அரிதாக அது தங்கும் இடங்களிலில் தெரியும். இது பல மாதங்கள் ஒரே இடத்தை இருப்பிடமாக பயன்படுத்துகிறது. இது பூச்சிகளை உணவாக கொள்கிறது. அவற்றை பறக்கும்போது பிடிக்கிறது அல்லது தரையில் அல்லது மரக் கிளைகளிலிருந்து பிடிக்கிறது. இதில் ஆண் பெண் என இருபால் பறவைகளும் அந்தி நேரத்தில் குரல் எழுப்புகிறது.
இப்றவைகளின் இனப்பெருக்க காலமானது தென்னிந்தியாவில் சனவரி முதல் ஏப்ரல் வரை, இலங்கையில் பெப்ரவரி முதல் மார்ச் வரை ஆகும். இதன் கூடானது அடியில் பாசிகளையும், அடி இறகுகளையும் கொண்ட திண்டால் ஆனது. கூடின் வெளிப்புறமானது இலைக்கன் மற்றும் பட்டைகளால் மூடப்பட்டிருக்கும். இப்பறவை வெள்ளையான ஒற்றை முட்டையை மட்டும் இட்டு அடைகாக்கும். முட்டையை பகலில் பெரும்பாலும் ஆண் அடைகாக்கிறது. இரவில் இரண்டும் தங்கள் பொறுப்பை பகிர்ந்து கொள்கின்றன. குஞ்சு பொறித்த பிறகு, ஆண் கூட்டை அழிக்கிறது. தவளைவாயன் இணைகள் பெரும்பாலும் ஒரே கிளையை பல கூடுகளுக்கு பயன்படுத்துகின்றன. குஞ்சானது பெற்றோருடன் சில மாதங்கள் தங்கி, அவர்களுக்கிடையில் பதுங்கியிருக்கும்.