அருள்மிகு மாயூரநாதர் திருக்கோயில்
மூலவர்:
மாயூரநாதர்
அம்மன்/தாயார்:
அஞ்சல் நாயகி
தல விருட்சம்:
வில்வம்
தீர்த்தம்:
காயல்குடி நதி
ஊர்:
பெத்தவநல்லூர், ராஜபாளையம்
மாவட்டம்:
விருதுநகர்
மாநிலம்:
தமிழ்நாடு
திருவிழா:
கார்த்திகை, பவுர்ணமி, சிவராத்திரி, சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷம், பிரம்மோற்சவம், நவராத்திரி விழா, சோம வார பூஜை, தனுர் பூஜை, ஆருத்ரா தரிசனம், 1008 திருவிளக்கு பூஜை, மகா சிவராத்திரி விழா, பங்குனி உத்திர திருவிழா
தல சிறப்பு:
மிகவும் பழமையான இந்தக் கோயில் ஓர் பிரார்த்தனை ஸ்தலமாகும். குழந்தைப் பெறப் போகும் தாய்மார்கள் இக்கோயிலுக்கு வந்து மாயூரநாதரை வேண்டிக் கொண்டால், சிவநேசி என்ற பெண்ணுக்கு புத்திரப்பேறு பெற உதவியது போல் அனைத்து தாய்மார்களுக்கும் தானே உதவிடுவார்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை,மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு மாயூரநாதர் சுவாமி திருக்கோயில் பெத்தவநல்லூர், ராஜபாளையம், விருதுநகர் மாவட்டம்.
போன்:
91 4563 222 203
பொது தகவல்:
இந்த சிவாலயத்தின் உள்ளே நுழைந்ததுமே விநாயகர், முருகன், பிரம்மா, விஷ்ணு, சிவன், துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என அனைவருமே நம்மை ஆசிர்வதிப்பது போன்ற அமைப்பு. ஸ்தல விநாயகர் கன்னி மூலையில் இருந்தபடியே அருள்பாலிக்கிறார். கிழக்கு பார்த்து அமைந்த இந்த சிவலாயத்தில் நந்தி தேவரை வணங்கி விட்டு மாயூர நாதரை தரிசிக்க செல்வோம். இந்த உலகிற்கே நான்தான் தலைவன் என்பது போன்ற ராஜஅலங்காரத்தில் இறைவன் காட்சி தருகிறார்.
அவரிடம் நமக்கு வேண்டியதை கேட்டுப் பெற வேண்டும் என்ற நினைப்புடன் சென்றால், மாயூர நாதரைப் பார்த்தவுடன் அவரை தரிசித்தாலே நமது பிறப்பு அர்த்தமுள்ளதாக அமைந்து விட்டது என்ற திருப்தி ஏற்படுகிறது. அருகிலுள்ள அன்னை அஞ்சல் நாயகியை தரிசிக்க செல்வோம். அங்கு சென்று அந்த தலைவியை பார்த்தால் அதற்கு மேல் அழகே இல்லை என்பது போன்ற ஒரு திருக்காட்சி. அம்மை, அப்பன் இருவரின் சன்னதிக்கு நடுவில் சோமஸ்கந்தர் சன்னதி, அதன்பின் நவகிரகங்களை வழிபட்டு பின் கொடி மரத்தின் இடதுபுறம் சென்றால் நாயன்மார்கள் சிவனை சேவித்தபடி காட்சி தருகிறார்கள்.
இவர்களையெல்லாம் தரிசித்த பின் கொடிமரத்தின் கீழ் வடக்கு நோக்கி நமஸ்காரம் செய்தால், நமக்கு மேல் குருபகவான் 12 ராசிகளுடன் நமது எதிர்காலத்தை வளமுள்ளதாக அமைக்க தாயாராக இருக்கிறார். நாம் கொடிமரத்தின் முன் உள்ள ஆமை மீது கைவைத்து தான் இறைவனை நமஸ்காரம் செய்கிறோம். ஆமையானது சிவனின் ஆபரணத்தில் ஒன்று. மேலும் தண்ணீரில் இருக்கும் வரை ஆமை நன்றாக சுற்றித்திரியும். ஆனால் கரைக்கு வந்தவுடன் தன் உடலை ஓட்டிற்குள் அடக்கி அமைதியாகி விடும். அதுபோலவே நாமும் வெளியில் இருக்கும் வரை நமது எண்ணங்களை அலைபாய விட்டாலும், சிவ சன்னதி உள்ளே வந்தவுடன் மனதை அடக்கி இறைவனை வழிபட்டு அவனருள் பெற வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்தவே இந்த நமஸ்கார வழிபாடு. வில்வமே இக்கோயில் தல விருட்சமாகும்.
பிரார்த்தனை
பிரிந்து வாழும் தம்பதியினர், குழந்தைப் பெறப்போகும் தாய்மார்கள் இக்கோயிலுக்கு வந்து மாயூர நாததை வேண்டிக் கொண்டால், புத்திரப்பேறு பெற தாய்மார்களுக்கு தானே உதவிடுவார் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
தம்பதியினர் இக்கோயிலுக்கு வந்து 48 நாட்கள் சுவாமி அம்மனுக்குரிய பள்ளியறை பூஜையின் போது ஏலக்காய் போட்ட தித்திப்பான பால் நைவேத்தியம் செய்து வழிபட்டால் ஒன்று சேர்ந்து வாழ்வார்கள் என்பது ஐதீகம்.
தல வரலாறு:
முன்னொரு காலத்தில் சிவநேசி என்ற பெண் சிவன் கோயில் வழியாக தன் தாய் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தாள். சிவநேசிக்கு அது பேறுகால சமயம். நடந்து சென்று கொண்டிருக்கும் போதே அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு மிகவும் கஷ்டப்பட்டாள். அங்கிருந்த சிவன் கோயில் வாசலில் அமர்ந்து அழுது புரண்டாள். இந்த துன்பத்தை கண்ட கருணை வடிவான சிவன் தானே அந்த பெண்ணின் தாய் உருவில் வந்து புத்திரப்பேறு உதவினார். அத்துடன் குழந்தையை பெற்ற பெண்ணின் தாகம் தீர காயல்குடி நதியை வரவழைத்து அதன் நீரை மருந்தாக பருகவும் உதவினார். (இந்த நதியே தற்போது இந்தக் கோயிலின் தீர்த்தமாக உள்ளது)
தன் பெண்ணின் பிரசவ செய்தியை கேள்விப் பட்ட தாய், சிவனே தன் உருவில் தாயாக வந்து பிரசவம் பார்த்ததை அறிந்து இறைவனை நினைத்து வழிபட்ட போது, சிவன் உமையவள் சமேதராய் காட்சி கொடுத்து அருள்பாலித்தார்.
ஒரு பெண் பிரசவ வலியால் துடித்த போது, அருகில் யாருமில்லாத நிலையில், சிவபெருமானே மருத்துவச்சியாக மாறி அவளுக்குப் பிரசவம் பார்த்த அதிசயம் நிகழ்த்திருக்கிறது.
அந்த இடம், பெத்தவநல்லூர். அந்த சம்பவத்தை முதலில் பார்த்துவிடுவோம். ராஜபாளையம் அருகே தீவிர சிவபக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரைப் போலவே அவரது மனைவி சிநேசியும் சிவனையே நேசித்து பூசித்து வந்தாள். நிறைமாத கர்ப்பிணியான அவள், சற்று தொலைவில் குன்றைவூரில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு தலைப்பிரசவத்திற்காக தனியாக நடந்து சென்று கொண்டிருந்தாள். தற்போது பெத்தவநல்லூர் என்று அழைக்கப்படும் இடத்தை நெருங்கியபோது, திடீரென்று அவளுக்குப் பிரசவ வலி தொடங்கியது. வலி தாங்காமல் இடுப்பைப் பிடித்தவாறு, அம்மா என்று அலறியபடி மங்கிக் கீழே விழுந்தாள் அவள்.
ஆள் நடமாட்டம் இல்லாத இடமென்பதால் அவளது அபயக் குரல் மற்றவருக்குக் கேட்கவில்லை. என்றாலும், நீக்கமற எங்கும் நிறைந்தவரான சிவபெருமானுக்குக் கேட்டது. அவளது நிலை கண்டு மணமிரங்கிய மகேசன். அவளது தாயார் கோலத்தில், மருத்துவச்சியாக வடிவெடுத்து வந்து சிவநேசிக்கு உதவினார். பிரசவம் நல்லபடியாக முடிந்தது. அவள் தாகத்தால் வருந்தியபோது, இறைவன் தன் திருவடி பெருவிரல் நகத்தால் தரையைக் கீற, அந்த இடத்தில் நதி ஒன்று உருவானது. அதிலிருந்து நீரைப் பருகி தாகம் தணித்துக்கொண்டாள் சிவநேசி. சட்டென்று மறைந்துபோனார் சர்வேஸ்வரன். அந்த சமயம் பார்த்து, வீட்டிற்கு வருவதாகச் சொன்ன மகள் இன்னும் வரவில்லையே என்ற பதைபதைப்புடன் அவளைத் தேடி சிவநேசியின் தாய் வந்துகொண்டிருந்தாள். வழியில், பிரசவம் முடிந்த மகளைப் பார்த்து பதட்டத்துடன் பிரசவம் நல்லபடியாக முடிந்ததா? பிரசவம் பார்த்தது யார்? என்று கேட்டாள் சிவநேசியின் தாய். என்னம்மா உளறுகிறாய்? நீதானே கொஞ்ச நேரத்திற்கு முன்பு எனக்குப் பிரசவம் பார்த்தாய் என்று குழப்பத்துடன் கேட்டாள் சிவநேசி. தாய்க்கு ஒன்றும் புரியவில்லை.
அப்போது ரிஷப வாகனத்தில் உமையுடன் எழுந்தருளிய ஈசன், என் பக்தையின் அபயக் குரல் கேட்டு மருத்துவச்சியாக வந்து பிரசவம் பார்த்தது நானே! சிவநேசியின் தாகம் தீர்த்த நதி இனி காயல் குடி நதி என்று அழைக்கப்படும் என்று கூறி மறைந்தார். அதன் பிறகுதான் இறைவனே மருத்துவச்சியாக அங்கு வந்து பிரசவம் பார்த்தது அவர்களுக்குப் புரிந்தது. பெற்றவளாக அதாவது பெற்ற தாயாக ஈசன் எழுந்தருளியதால், பெற்றவள் நல்லூர் என அழைக்கப்பட்ட தலம் இன்று பெத்தவநல்லூர் என அழைக்கப்படுகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:
மிகவும் பழமையான இந்தக் கோயில் ஓர் பிரார்த்தனை ஸ்தலமாகும். குழந்தைப் பெறப் போகும் தாய்மார்கள் இக்கோயிலுக்கு வந்து மாயூரநாதரை வேண்டிக் கொண்டால், சிவநேசி என்ற பெண்ணுக்கு புத்திரப்பேறு பெற உதவியது போல் அனைத்து தாய்மார்களுக்கும் தானே உதவிடுவார்.